தமிழ் சினிமா

“சிறிய படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு பெரிய நம்பிக்கை” - பா.ரஞ்சித்

ஸ்டார்க்கர்

சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன என்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.

ஸ்கை பிக்சர்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள படம் ‘காளிதாஸ் 2’. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் இப்படத்தினை முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீசெந்தில் இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத், சங்கீதா, அபர்ணதி, அஜய் கார்த்தி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

          

இந்த விழாவில் படக்குழுவினரோடு திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “செந்திலுக்கும், நாராயணசாமிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது.

நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் சுவாரசியமான ஒரு படம். இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும், சங்கீதா மேம், பவானி, அபர்ணா மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத்தும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.

இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது.

சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன.

முன்பு இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம். ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடர வேண்டும்” என்று பேசினார் பா.ரஞ்சித்.

SCROLL FOR NEXT