தமிழ் சினிமா

எம்.எஸ்.பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’

ப்ரியா

சென்னை: எம்.எஸ். பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் 'விடியும் காத்திரு' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோருடன் பணியாற்றிய ஆர்.அரவிந்த ராஜன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஃப்ரண்ட்ஸ் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்காகச் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கிருக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் ஏற்படும் அனுபவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பெரிய சாவி துவாரத்தின் வழியே பயத்துடன் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கரின் முகமும், கதவில் இடம்பெற்றுள்ள "யூ ஆர் நெக்ஸ்ட்" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.

சி.சத்யா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT