நான் நடிக்க வாய்ப்பு தேடும் போது எளிதாக எனக்கு கிடைத்து விடவில்லை. எப்படியாவது சினிமாவில் இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்து தீவிரமாக முயற்சி செய்தும் பலனில்லை. அதற்காக ஒதுங்கி விடவும் மனமில்லை. நான் எங்கு சென்றாலும் சினிமாவே என் மனம் முழுவதும் இருந்தது.
நான் பல பேட்டிகளில் சொன்னது போல, ‘ஒரு படம் நடிச்சா ரெண்டு படம் ஃப்ரீ’ என்று கூட ஒரு திட்டத்தை அறிவிக்கலாம் என நினைத்தேன். அப்போது என் தோற்றம் ரஜினி சார் மாதிரி இருக்கும். என் ஹேர் ஸ்டைலையும் அவர் போலதான் வைத்திருப்பேன்.
“ரஜினிகாந்த் மாதிரியே நளினிகாந்துன்னு ஒருத்தர் இருக்காரு. நளினிகாந்த் மாதிரியே இன்னொரு காந்தும் வந்துட்டாரு. உன் மூஞ்சியும் அப்படித்தான் இருக்கு. சினிமாவுல நடிக்க வந்து நீலாம் ஒன்னும் பண்ணப்போறதில்ல, போயா” என்று முகத்துக்கு நேராக சொன்னார் ஒரு இயக்குநர்.
இதற்காக நான் வருத்தப்படவில்லை. வருத்தப்பட்டு என்ன நடந்து விடப்போகிறது? அதனால், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண் டேன். அதற்குப் பிறகு அதே நபர், ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்தார். அவர் யார், என்ன படம் என்பதை சொல்ல விரும்பவில்லை. காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்காகவும் எல்லோருக்கும் அவர்கள் தேடும் வாய்ப்பு என்றாவது கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்காகவுமே இதை சொல்கிறேன்.
அவர், என்னிடம் எப்போதோ அவமானப்படுத்தி பேசியதை மறந்து விட்டார். ஆனால் காயப்பட்ட மனம் எதையும் மறக்காது. அவர் எனக்கு போன் செய்து, “நீங்க என் படத்துக்கு ரெண்டு நாள் கால்ஷீட் தரணும். நீங்க நடித்தால் என் படத்துக்கு ஒரு மெரிட் வரும் தம்பி” என்றார். அவர் கேட்கும் போது உண்மையிலேயே டி.வி.தொடர்களில் பிசியாக இருந்தேன் என்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
இதே போல இன்னொரு இயக்குநரிடம் என்னுடைய நண்பர் அசோசியேட்டாக பணிபுரிந்தார். அந்த இயக்குநரை அண்ணா என்று அழைத்து ஆசையாக பேசுவேன். அப்போது அந்தப்படத்தில் சின்ன ரோலில் நடிக்க ஆள் தேவையாக இருந்தது. வெறும் இரண்டு சீன்தான். அசோசியேட்டாக பணிபுரிந்த நண்பர், என் பெயரை சொன்ன போது, “அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், அவரை போய் நடிக்கச் சொல்றே.
மைக்கிட்ட நிக்கிற மாதிரி நின்னுட்டான்னா, நம்ம சீனே கெட்டுப் போகும்” என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர். அப்போது என் நண்பர், “இல்ல சார், அவன் திறமை பத்தி எனக்கு தெரியும். நீங்க எடுங்க, அவன் சரியா நடிக்கலைன்னா அதே லொகேஷன்ல எடுக்க வேண்டிய வேற சீன்ஸ் இருக்கு. அதை எடுத்துக்கலாம்” என்று சொன்னார். அவர் நம்பிக்கையே இல்லாமல், “என்னமோ சொல்றீங்க; ரைட்டு” என்று சொல்லி விட்டார்.
எனக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக போனேன். நான் நடிக்க ஆரம்பித்தேன். என்னுடன் நடித்தவர் புகழ்பெற்ற நடிகர். இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். நான் ஆசையாக மாமா என்று அவரை அழைப்பேன். நடித்து முடித்ததும், “மச்சான், நீ நடிக்கிற மாதிரிலாம் என்னால நடிக்கவே முடியாது, அந்த மாதிரி பாஷையே பேச முடியாதுடா” என்று பாராட்டினார்.
இதற்கிடையே அவர் இயக்கிய இன்னொரு படத்திலும் ஒரு பெரிய நடிகையுடன் நடித்தேன். அப்போது என் நண்பருக்கும் அந்த இயக்குனருக்கும் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு, அதற்காக நான் நடித்திருந்த காட்சிகளை படங்களிலிருந்தும் வெட்டிவிட்டார். இதை கேள்வி பட்டதும் எனக்கு தூக்கம் வரவில்லை. கவலையாக இருந்தது. மறுநாள் போய் அவரிடம் கெஞ்சி கேட்கலாமா? என்று யோசித்தேன்.
“நல்ல வேடங்கள் நடித்திருக்கிறேன், அவர்கள் சண்டையில் என் காட்சிகளை ஏன் நீக்க வேண்டும்?” என்று எனக்கு கோபம். பிறகு வழக்கம் போல நண்பரின் வீட்டுக்கு ஒரு நாள் போனபோது, அவர் என்னைப் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார். “எனக்கும் அவருக்குமான சண்டையில், நான் சொல்லி நடிக்க வைத்ததால் உன் காட்சிகளை வெட்டி விட்டார்” என்று வருத்தப்பட்டார். “விடு நண்பா, நமக்குன்னு ஒரு நேரம் வரும்” என்று அவரிடம் கூறி விட்டு, அதை சவாலாக எடுத்துக் கொண்டேன்.
பிறகு அந்த இயக்குனரை சந்தித்தபோது, “படத்தோட கதைக்கு நீங்க நடிச்ச சீன் ஒட்டலை, அதனால நீக்கிட்டேன். அடுத்த படத்துல நல்ல கேரக்டரா தர்றேன்” என்றார்.
பிறகு என் நண்பரிடம், “ரெண்டு கண்ணையும் பிடுங்கிட்டு ரேபான் கிளாஸ் வாங்கித் தாரேன்னு சொன்னவரு உங்க டைரக்டர்தான்யா” என்று சொல்லிச் சிரித்தேன்.
அதற்குப் பிறகு, அந்த இயக்குனருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.
பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஒரு படத்திற்காக எனக்கு போன் பண்ணி, “ஒரு படம் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு... என்ன சம்பளம் வாங்குறீங்க?” என்று கேட்டார். நான் அந்த நேரத்தில் வாங்க்கிக்கொண்டிருந்த தொகையைச் சொன்னேன். “சரி, எனக்காக என்ன பண்றீங்க? என்று கேட்டார். “உங்களுக்காக வேணும்னா இந்தப் படத்துல நடிக்காம இருக்கேன்” என்று சொன்னேன். அவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. உடனே, “இன்னும் பழசை மறக்கலை போலிருக்கு” என்றார்.
“பழசை மறக்கக் கூடாதுன்னுதானே எல்லோரும் சொல்லிட்டு இருக்காங்க” என்றேன். அதற்கு பிறகு அந்த இயக்குநர் அந்த படம் இயக்கவில்லை. அவரை நான் சந்திக்கவும் இல்லை. இதுபோல பல இயக்குநர்கள், புரொடக் ஷன் மானேஜர்கள் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். “சினிமாவுல நீ ஒண்ணும் சாதிக்கவே முடியாதுய்யா” என்று சொன்னவர்கள் அதிகம். அதை நான் சவாலாகவே எடுத்துக் கொண்டேன்.
ஏவி.எம் கார்டனில் ஒரு படத்தின் ஷூட்டிங். அப்போது புகழ்பெற்ற இயக்குநராக இருந்தவர் படம் இயக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் நான் தவழ்ந்து போகாத குறையாகச் சென்று வாய்ப்பு கேட்டேன். பக்கத்தில் இருந்தவர்களிடம் என்னை காட்டி கிண்டலாக சிரித்தார். அவர் சிரிப்பதை பார்த்து அங்கிருந்தவர்களும் சிரித்தார்கள். நான் நின்று கொண்டே இருந்தேன்.
அவர் சொன்னார், “நீ, ஏவி.எம்ல இருந்து வெளிய போ, வடபழனி பஸ் ஸ்டாண்ட் வரும். அப்படியே நடந்தா வடபழனி கோயில் வரும். அந்த லெஃப்டை விட்டிரு. அதுக்கடுத்த லெஃப்ட்டையும் தாண்டி போனா, சலாம் ஸ்டோர்னு ஒரு கடை வரும். அங்க போயி ஒரு அரை கிலோ வேஷம் வேணும்னு கேட்டு வாங்கிட்டு வா” என்று நக்கலாக சொல்லி சிரித்தார்.
அதே இயக்குநர், நான் பிசியாகிவிட்ட காலத்தில், நான் நடித்த எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அதைப் பார்த்துவிட்டு எனக்கு போன் பண்ணி பாரட்டுபவராக இருந்தார். இதே போல மற்றொரு பெரிய இயக்குனர் அவரிடம் வாய்ப்பு கேட்கும்போது, “நான் எல்லாம் படம் எடுத்து பிழைக்கிறது உனக்கு பிடிக்கலையா?” என்று கிண்டலாகக் கேட்டார். அப்போது அவருடைய அசோசியேட் அவரை பார்த்து, “இவரை பத்தி உங்களுக்குத் தெரியல.
அவன் திறமை என்னன்னு நான் அளந்து வச்சிருக்கேன். ஒரு காலத்துல பெரிய நடிகனாக வருவான். அப்ப நீ போயி கால்ஷீட் கேட்பே, அவன் இல்லைன்னு சொல்வான்” என்று என் மீதான நம்பிக்கையில் சொன்னார். பிறகு அதே போல அழைத்தார். அப்போது சீரியலில் பிசியாக இருந்தேன். என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
(திங்கள்தோறும் பேசுவோம்)