ஜாய் கிரிசில்டாவின் மகன் ராகாவை தனது மகன் என கூறியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனுக்கு அனைத்து கடமைகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், மகன் ராகாவுடன் இருக்கும் படத்தையும், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘எனது மகன் ராகாவுக்கு ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன்.
இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்துக்காக முழு பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார்.
இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா இடையில் மத்தியஸ்தம் செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. மரபணு சோதனையில் குழந்தை ரங்கராஜின் மகன் என்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.