

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டம் குறித்த பாஜக எம்பி கங்கனா ரணாவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட், பொதுவாழ்வில் இருப்பவர்கள் கவனமாக பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஜென்ஸீ இளைஞர்களை ‘சாக்கடை தலைமுறை’ என்று விமர்சித்த கங்கனா ரணாவத் குறித்து பேசிய சோனு சூட், “அவர் கூறியவற்றை நான் இன்னும் கேட்கவில்லை. ஆனால், அந்த இளைஞர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள், நீங்கள் இந்த இடத்துக்கு வர உதவி இருக்கிறார்கள்.
அவர் (கங்கனா) அவ்வாறு பேசியிருந்தால், அது அவமானகரமான ஒன்று. அவர் அப்படி சொல்லியிருக்க கூடாது. எவ்வளவு காலம் இளைஞர்கள் உங்களுடன் நிற்கிறார்களோ அந்த அளவுக்கு நீங்கள் ஜொலிப்பீர்கள்.
சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது என ஒரு சொலவடை உண்டு.பொதுவாழ்வில் இருப்பவர்கள் பேசுவதற்கு முன்னால் பல முறை யோசித்த பின் பேச வேண்டும். ஏனெனில் பொது மக்கள் கடவுளின் இன்னொரு வடிவம்” என்று சோனு சூட் கூறினார்.
முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்ட வீடியோக்களை பார்த்தேன். என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு மோசமான காட்சிகளை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் பேசும் விதம், பயன்படுத்தும் மொழி மிக கொடூரமாகவும், கீழ்த்தரமாகவும் உள்ளது.
இவர்களை யார் பெற்று வளர்க்கிறார்கள்? இந்தியா அழகான பன்முகத்தன்மை கொண்ட மக்கள், கண்ணியத்துடனும் கலாச்சாரத்துடனும் வாழும் இடம். உங்களை நீங்களே கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக் கொண்டு, அவற்றை போலவே செயல்படுகிறீர்கள். உலகிற்கு உங்கள் குப்பையையும், அசுத்தத்தையும் காட்டுகிறீர்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.