சென்னை: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரில் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெளியான முதல் நாளிலில் இருந்தே படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களிலேயே ரூ.147 கோடி வசூலித்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு 25 சதவீதம் கூடுதல் வசூலைப் பெற்று, அன்றைய தினம் மட்டும் இந்தியாவில் சுமார் ரூ.6 கோடி இப்படம் வசூலித்துள்ளது. இதன் மூலம், இரண்டாவது வார இறுதியில் இப்படம் இந்தியாவில் ரூ.63.75 கோடியை அள்ளியுள்ளது. இரண்டு வாரங்களின் ஒட்டுமொத்த முடிவில், 'கருப்பு' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் மொத்தம் ரூ.193.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் வெறும் ரூ.7 கோடி மட்டுமே தேவைப்படும் நிலையில், நாளைய தினத்துக்குள் இந்திய அளவில் இப்படம் ரூ.200 கோடி கிளப்பில் அதிகாரபூர்வமாக இணையவுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.128 கோடி வசூலித்துள்ளது. இதில் இரண்டாவது வாரத்தின் வசூல் மட்டுமே ரூ.45.50 கோடியாகும். தமிழகத்தைத் தவிர, அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் படம் சீரான வசூலுடன் ரூ.30 கோடியை நெருங்கி வருகிறது. கர்நாடகாவில் ரூ.20 கோடியையும், கேரளாவில் ரூ.13.25 கோடியையும் கடந்து சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை இப்படம் நிகழ்த்தி வருகிறது.