தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பி மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து படக்குழு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
அதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணி்க்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்புக் குழு மீண்டும் தனி நீதிபதியை நாடவும், தனி நீதிபதி இரு தரப்புக்கும் போதிய அவகாசம் அளித்து விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.
இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது தொடர்பாக நேரடியாக தணிக்கை வாரியத்தையே நாடவுள்ளதால், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக படத்தயாரிப்பு தரப்பி்ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பின்னர் இப்படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது. மார்ச் 17-ல் மறு ஆய்வுக் குழுவினர் படத்தைப் பார்த்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதாலும் படத்தில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாலும் படத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு மறு ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீடு தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை மாதம் இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் யாஷ் நடித்துள்ள ‘த டாக்ஸிக்’ படம் மார்ச் மாதம் வெளியாக இருந்தது. படத்தை ஜூன் 4-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். அதன் வெளியீட்டில் கவனம் செலுத்த இருக்கும் இந்நிறுவனம், அப்படம் வெளியான பிறகே ‘ஜனநாயகன்’ படத்தில் கவனம் செலுத்தும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.