பிரபல இசை அமைப்பாளரான இளையராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தினார்.
ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் நடத்திய இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சிக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனி எழுதி அதை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை, இளையராஜா படைத்தார்.
இந்நிலையில், சென்னையில் மே 30-ம் தேதி ‘வேலியன்ட்’சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். ‘ஃபிரம் ராஜா வித் லவ்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்று நேரலையாக இசைக்க உள்ளனர். இந்நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.