நடிகர் அஜித் சார் ஒரு சிறந்த மனிதர் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படமொன்று தயாராகி வருகிறது. இது முதலில் ஆவணப்படம் என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் இது முழுமையான படம் என்றும், ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும் என்றும் விஜய் பேட்டி யொன்றில் தெரிவித்திருந்தார்.
இப்படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். நேற்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். அங்கு அஜித் குறித்து ஜி.வி.பிரகாஷ் பேசும் போது, “அஜித் சார் ஒரு சிறந்த மனிதர். ‘வெயில்’ படத்துக்குப் பிறகு அவர் ‘கிரீடம்’ என்ற பெரிய படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார்.
பின்பு நாங்கள் இணைந்து ‘குட் பேட் அக்லி’ படத்தில் பணிபுரிந்தோம். இப்போது அவரது கார் ரேஸ் மையப்படுத்திய படத்துக்கு இசையமைக்கிறேன். அஜித் சாருடன் தொடர்ந்து பணிபுரிவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.