சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘பேட்ட’ மற்றும் ‘காஞ்சனா-3’ ஆகிய திரைப்படங்களின் வெளிநாட்டு உரிமைகளை பெற்றுத்தருவதாக, மறைந்த இயக்குநர் ராம நாராயணனின் மகனும், தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருமான முரளி ராமசாமி, மலேசியாவில் உள்ள மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்காக, 2018-ம் ஆண்டு மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் ரூ.30 கோடியை முரளிக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தப்படி அந்த இரு படங்களின் வெளிநாட்டு உரிமையை அவர் அந்த நிறுவனத்துக்குப் பெற்றுத்தரவில்லை என்பதால் வாங்கிய தொகையில் ரூ.15 கோடியை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார்.
மீதித்தொகையான ரூ.15 கோடியை திருப்பி கொடுக்கவில்லை எனக்கூறி மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முரளி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ரூ.10 கோடிக்கு முரளி அளித்த காசோலை பணமின்றி திரும்பியதால் அவருக்கு எதிராக மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்துள்ளது.