இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மகாகவி பாரதியின் பாடல்கள் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் இடம்பிடிக்கும்.
அதற்குத் தற்போதைய எடுத்துக்காட்டு ஜெய் நடிப்பில் உருவாகி வரும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படம். பி.வி. புரொடெக் ஷன் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
பாரதியின் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ கவிதையை அடிப்படையாக வைத்து, மதுரையின் ராப் இசைக்குழுவான சோல்ஜர்ஸுடன் இணைந்து ராப் பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இப்படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
அது இணையத்தில் வெளியாகி 20 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது. தேர்தல் நேரத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ள இப்பாடலை இக்குழுவே பாடியிருக்கிறது.
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.