விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்' படத்தை பொங்கலுக்கு வெளியிட உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஜன.9-ம் தேதி வெளியாக இருந்தது. தணிக்கை சான்றிதழ் காரணமாக வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இப்படத்தின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், என்னால் எல்லாவற்றையும் பகிர முடியவில்லை. கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘ஜனநாயகன்’ தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதைக்குழு ஆய்வு செய்து, டிச. 22 அன்று சில மாற்றங்களைப் பரிந்துரைத்தது. ‘யுஏ 16 பிளஸ்’ சான்றிதழ் வழங்கப்படும் என மெயில் மூலம் தெரிவித்தனர்.
பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பித்த போதும், சான்றிதழ் பெற முடியவில்லை. ரிலீஸு-க்கு சில நாட்களே இருந்த நிலையில், ஜன.5-ம் தேதி மாலை, ஒரு புகாரின் பேரில் மறு ஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
படத்தை ரிலீஸ் செய்ய மிகக் குறைந்த நாட்களே இருக்கும் போது, புகார் கொடுத்தவர் குறித்த தெளிவின்மை காரணமாக, உயர் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்துக்கு ‘யுஏ 16 பிளஸ்’ சான்றிதழை வழங்க உத்தரவிட்டது.
ஆனால், தணிக்கை வாரியம் உடனடியாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இதன் விளைவாக, சான்றிதழ் வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்கிறேன்: இந்த சூழலில் ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் அனைவரிடத்திலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சில காரணங்களால் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
கடந்த 33 ஆண்டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்களிடமிருந்து பெற்ற அன்பு, திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு ஓர் அற்புதமான பிரியா விடை அளிக்கப்பட வேண்டும். அதற்கு அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர். நீதித்துறை நடைமுறைகள் மீது நம்பிக்கை இருக்கிறது. விரைவில் படம் வெளியாகும்” என்று வெங்கட் நாராயணா கூறியுள்ளார்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை திங்களன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.