விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜன. 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்திருப்பதால் ‘ஜனநாயகன்’ அவருடைய கடைசி திரைப்படமாகும். அதிக எதிர்பார்ப்பு உள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 80 முதல் 90 ஆயிரம் ரசிகர்கள் குவிந்ததை அடுத்து மலேசியாவில் அதிகம் பேர் பங்கேற்ற தமிழ்த் திரைப்பட இசை நிகழ்ச்சி இது என்று மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்தது.
இந்நிகழ்ச்சியில் விஜய் பேசும்போது கூறியதாவது: இலங்கைக்கு அடுத்தபடியாக, மலேசியாவில் தான் அதிகளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அதிகளவில் தமிழ் படங்கள் இங்கே ஷூட் செய்யப்படுகின்றன.
நண்பர் அஜித்தின் பில்லா பட ஷுட்டிங் இங்கு தான் நடந்தது. எனது காவலன், குருவி படங்களின் ஷூட்டிங்கையும் இங்கு நடத்தினோம். நான் திரைத்துறையில் நுழைந்த போது சிறிய மணல் வீடு கட்ட தான் ஆசைப்பட்டேன். ஆனால், நீங்கள் எல்லாரும் எனக்கு அரண்மனையே தந்திருக்கிறீர்கள். 33 வருடம் தொடர்ந்து ஆதரவு தருவது சாதாரண விஷயம் இல்ல.
ஆனால் ரசிகர்கள் அதை எனக்கு தந்திருக்கிறார்கள். அதற்கு வெறும் நன்றி மட்டும் சொல்லாமல் நன்றி கடன் செலுத்தும் விதமாக அவர்களுக்காக நிற்கிறேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த அவர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, வலுவான எதிரிகள் அவசியம்.
சும்மா வருகிற போகிறவர்களை எதிர்த்து நிற்க முடியாது. வலுவானவர்களை எதிர்த்தால் தானே, நாம் ஜெயிக்கிற அளவுக்கு வலிமையாக இருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது நம்மைப் பற்றி ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் தனியாக வருவாரா, அணியாக வருவாரா என்று கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக இருந்திருக்கிறோம்.
33 வருடமாக மக்களான உங்களுடன் மிகப்பெரிய அணியாகத்தானே இருக்கிறேன். 'என்னடா இப்போ கூட சஸ்பென்ஸ் வைக்கிறாரே?' என்றுதான் தோன்றும். சஸ்பென்ஸ் இருந்தால் தானே கிக் இருக்கும். இவ்வாறு விஜய் பேசினார்.