

கரோனா தொற்று கொடியது. சில மாதங்களுக்கு கோரத்தாண்டவம் ஆடியது. பல லட்சம் மக்களைக் கொன்று குவித்தது. ஆனால், கரோனா வேறு சிலவற்றையும் செய்தது. அவற்றில் ஒன்று, இணையத்தை எவ்வாறு கூடுதலாகப் பயன்படுத்தலாம் என்பதை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.
அதற்கு முன்னரும் கூட, ஜூம், யுடியூப் போன்றவற்றை பலரும் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கிய மக்களின் பார்வை தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன்கள் பக்கம் திரும்பியது . வேலைக்கு போய்க் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மட்டுமல்ல. சில சிறார்கள்கூட சொந்தமாக யுடியூப் சேனல்களை ஆரம்பித்தார்கள். அவர்களுக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அதில் பகிர்ந்தார்கள்.
செலவில்லாமல் செய்யக்கூடியது என்றுதான் ஆரம்பித்தார்கள். அதன் மூலம் வருமானம், அதிலும் இவ்வளவெல்லாம் வரும் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கவில்லை. சென்ற அத்தியாயத்தில் பார்த்தது போல, மாதம் சில ஆயிரங்கள் முதல் சில, பல லட்சங்கள் வரை சம்பாதிக்கும் தனி நபர்கள் இருக்கிறார்கள்.
Village Cooking Channel (கிராமத்து சமையல்) என்கிற தமிழ்நாட்டு யுடியூப் சேனல், எளிய மனிதர்கள் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்கு சான்று. அந்த சேனலுக்கு இருக்கிற சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 30 லட்சம். `அவர்களது தோசை போடுவது எப்படி?’ வீடியோவை 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். `சாக்லேட் மில்க் ஷேக் போடுவது எப்படி?’ என்ற வீடியோவுக்கு, ஒரு கோடியே 70 லட்சம் பார்வைகள்.