நடிகர் ரவி மோகன்
நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புப்படுத்தி சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் விவாகரத்து வழக்கு தொடர்பாக ரவி மோகன் மற்றும் ஆர்த்தி என இரு தரப்பும் பரஸ்பரம் எந்த கருத்துகளையும் பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ரவி மோகனை பிரிவதாக பாடகி கெனிஷா சமூக வலைதளம் வாயிலாக பதிவிட்ட நிலையில், ரவி மோகன் கடந்த மாதம் 16ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தனது குழந்தைகளுக்காக அமைதி காப்பதாக மனக் குமுறலை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ரவி மோகன் ஊடகங்களிடம் பேட்டியளி்த்துள்ளதாகக் கூறி ஆர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது தனது செயலுக்காக மன்னிப்பு கோரி ஊடகங்களில் பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தெரிவித்தார்.
அதைப் பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம் ஆர்த்தியின் மனுவை முடித்து வைத்தது. அதன்படி ரவி மோகன் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பத்திரிகையாளர்களிடம் திருமண தகராறு தொடர்பாக பேசி விட்டேன். இதற்காக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.