சென்னை: “நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி நடிக்கும் 173-வது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ரஜினி 173’ படத்துக்கு ‘தர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த விழாவில் ரஜினியின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. அவர் பேசியதாவது; நான் பேசினாலே பிரச்சினை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்சினை. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள்.
பேசினால், ‘இப்பப் பேசு’ எனச் சொல்வார்கள். மற்றவர்கள், இவர் பேசியிருக்கவே கூடாது என்பார்கள். எனக்கு ரொம்ப நாள் கழித்துதான் தெரிந்தது; நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.
இந்த படத்திற்கு நான்காவது இயக்குநர் அஸ்வத். முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது; பின்னர் சுந்தர் சி, அதன்பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி கடைசியாக அஸ்வத் இயக்க உள்ளார். சிபி சொன்ன கதை பிடித்திருந்தது. ரொம்ப சென்சிட்டிவ் சப்ஜெக்ட். அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம், அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைத்தோம். அஷ்வத் மாரிமுத்துவின் ‘டிராகன்’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘பேட்ட’ படத்துக்கு பிறகு சிம்ரனுடன் நடிக்கிறேன்.
கமல் உடனான நட்பு பற்றி சொல்லவே தேவையில்லை. கமல் செய்த உதவியாகட்டும், ஊக்கமாகட்டும் சொல்லவே முடியாதவை. 1975-களில் கமல் பெரிய ஸ்டார். நான் அந்த சமயம் தான் வந்தேன். ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் கமலால் தான் பண்ணினேன். அதில் முதலில் ஜெய் கணேஷ் நடிக்க வேண்டியது; கமல் தான் நான் நடிக்க வேண்டும் என ஸ்ரீதரிடம் பேசி என்னை நடிக்க வைத்தார்” இவ்வாறு அவர் பேசினார்.