நடிகர் பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘ரஞ்ஜன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.
இப்படத்தைத் தியாகராஜன் இயக்குகிறார். பிரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்துக்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இது தெலுங்கில் வெற்றிபெற்ற ‘கோர்ட்’ படத்தின் ரீமேக். இதில் வழக்கறிஞராக பிரசாந்த் நடிக்கிறார்.
தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, பைவ்ஸ்டார் செந்தில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும். பிரசாந்துக்கும் எனக்கும் 35 வருட பழக்கம். 91-ம் ஆண்டு அவரை எப்படி பார்த்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறார்.
பிரசாந்த் நடிப்பில் ஏற்கெனவே 3 படங்கள் இயக்கி இருக்கிறேன். அவர் நடிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்க நினைக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் விஜயகாந்த் சாருக்கு நிகரான திறமைகளைக் கொண்டவர் பிரசாந்த். அவர் அஸ்டாவதானி. அவருக்கு டைரக் ஷன், மியூசிக், எடிட்டிங் என அனைத்தும் தெரியும். அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கிறார்” என்றார்.