தமிழ் சினிமா

என் வளர்ச்​சியை தாமதப்படுத்திய இயக்​குநர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 38

Guest Author

சினி​மா​வில் எது​வும் எளி​தில் யாருக்​கும் கிடைத்து விடாது என்​பது உலகறிந்த ஒன்​று! இங்கு புகழ் பெற்​றிருக்​கிறவர்​களில் பெரும்​பாலானவர்​கள் பெரும் போராட்​டத்​துக்கு பிறகே அந்த இடத்தை அடைந்​திருக்​கிறார்​கள். அதில் நானும் விதி​விலக்​கல்ல. பல்​வேறு அவமானங்​களைச் சந்​தித்​து​தான் இந்த இடத்​துக்கு வந்திருக்கிறேன்.

என் வளர்ச்​சியை தாமதப்​படுத்​தி​ய​தில் பலருக்கு பங்கு இருக்கிறது. அவர்​களில் பிரபல இயக்​குநர் ஒரு​வரும் உண்​டு. அவர் பெயரை சொல்ல விரும்​ப​வில்​லை. என் நண்​பர் ஒரு​வர் அவரிடம் இணை இயக்​குந​ராகப் பணி​யாற்​றி​னார். அந்த இயக்குநரின் படங்​களில் நான் டப்​பிங் பேசி​யிருக்​கிறேன். அதற்கு காரணம் என் நண்​பர். நான் நிறைய பிட் வாய்​ஸ்​கள்​தான் பேசிக்​கொண்​டிருந்​தேன்.

ஓய்​வாக இருந்​தால் என் நண்​பரின் அறைக்​குச் செல்​வேன். நிறைய பேசிக்​கொண்​டிருப்​போம். ஒரு நாள், ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இயக்​குநர் ஆள் வேண்​டும் என்று அவரிடம் கேட்​டிருக்​கிறார். புது​முகம் இருந்​தால் நன்​றாக இருக்கும் என்​றும் சொல்​லி​யிருக்​கிறார். நண்​பர் என் பெயரை சிபாரிசு செய்​திருக்​கிறார்.

உடனே, “அவர் டப்​பிங் ஆர்ட்​டிஸ்ட் ஆச்​சே, சும்மா வந்து மைக் முன்​னால நின்னு பேசுற மாதிரி நின்​னுட்டா என்ன பண்​றது?” என்று கேட்​டிருக்​கிறார் இயக்​குநர். என் நண்​பர், “அப்​படி நின்னுட்டா நான் அனுப்​பிடறேன். வேற காட்​சிகள் எடுக்​கறதுக்கு இருக்​கு, அதை எடுத்​துக்​கலாம். பிரச்​சினை​யில்ல” என்று சொல்லியிருக்​கிறார். இயக்​குநர் விருப்​பமே இல்​லாமல் என்னை வரச்​சொன்​னார். நான் லொகேஷனுக்கு சென்​றேன்.

யாராவது நடிக்க வாய்ப்பு கொடுத்​து​விட மாட்​டார்​களா ? என்று அதிக எதிர்​பார்ப்​புட​னும் ஆர்​வத்​துட​னும் நான் அலைந்து கொண்டிருந்த காலம் அது. அந்த இயக்​குநர் “ஓரளவுக்​காவது பண்ணு​வி​யா?” என்று கேட்டு விட்டு நடிக்​கச் சொன்​னார். நான் “நன்​றாகவே நடிப்​பேன்” என்று சொல்​லி​விட்டு நடித்​தேன். பெரியஷாட் ஒன்றை கம்​போஸ் செய்​து​விட்​டு, “வசனம் பெருசா இருக்​கு, பேசிரு​வி​யா?” என்று கேட்​டார்.

“சீன் பூரா​வுமே என்​னால பேச முடி​யும் சார்” என்​றேன். என்​னைப் பார்த்​தவர், “இதை மட்​டும் பேசு, போதும்” என்​றார். அதில் எனக்கு மட்​டும் ​தான் வசனம் வரும். என்​னுடன் இன்​னும் சிலரும் நடித்தார்கள். நான் ஒரே டேக்​கில் பேசி முடித்​தேன். அதைக்கண்டு செட்​டில் இருந்​தவர்​கள் எல்​லோருமே கைதட்​டி​னார்​கள். நான் வெளி​யில் வந்து நின்​றிருந்​தேன்.

அந்த இயக்​குநர், “உன்னை நான்​தான் வேண்​டாம்னு சொன்​னேன். இப்ப இந்த கேரக்​டருக்கு உன்​னை​விட்டா யாரும் பொருத்​தமா இருப்​பாங்​களான்னு கற்​பனை கூட பண்ணி பார்க்க முடியலை” என்​றார். சந்​தோஷம் சார் என்​றேன். என் நண்​ப​ரான இணை இயக்குனருக்​கும் மகிழ்ச்​சி. 2 நாட்​கள் படப்​பிடிப்பு இருந்​தது. நடித்தேன். பிறகு அதே இயக்​குநர் இயக்​கிய வேறொரு படத்​தில் 2 காட்​சிகள் இருந்​தன.

அதி​லும் என் நடிப்​பைப் பாராட்​டி​னார். இதற்கு இடையில என் நண்​பருக்​கும் அந்த இயக்​குநருக்​கும் ஏதோ கருத்து வேறு​பாடு. அதை என் நண்​பர் சொன்​னார். பிறகு ஒரு நாள் அந்த இணை இயக்​குநர் அறைக்​குச் சென்ற போது என்​னைப் பார்த்து அழு​தார். என்ன ? என்று கேட்​டேன். “எனக்​கும் அவருக்​கும் பிரச்சினை. நீங்க என் நண்​பர் அப்​படிங்​கறதுக்​காக உங்​கள் காட்சிகளை, அந்த இரண்டு படத்​துல​யும் கட் பண்​ணிட்​டார்” என்​றார். அன்று இரவு தூக்​கம் வரவில்​லை.

கண் கலங்கிவிட்​டது. அழுதேன். மறு​நாள் அந்த இயக்​குநர் வீட்டுக்குச் சென்​றேன். அவரிடம் “ஏன் சார் இப்​படி பண்​ணிட்​டீங்க ?” என்று கெஞ்​சலாம் என நினைத்​துக் கொண்​டிருந்த போது, அந்த இயக்​குநரே வந்​தார். “உங்க சீன்​களை வைக்க முடியல. அடுத்த படத்​துல தர்​றேன்” என்று கூலாக சொல்​லி​விட்​டுப் போய்​விட்​டார்.

பிறகு இணை இயக்​குநர் அறைக்​குச் சென்​றேன். அவர், “என்னையும் இயக்​குநர் வரவேண்​டாம்னு சொல்​லிட்​டார்” என்றார். எனக்கு வருத்​த​மாக இருந்​தது. பிறகு அந்த இயக்​குநரை நான் சந்​திக்​கவே இல்​லை. இணை இயக்​குநரை அடிக்​கடி பார்ப்பேன்.

பிறகு சீரியல்​களில் நடிக்​கத் தொடங்​கினேன். தொடர்ந்து வாய்ப்பு​கள் வந்​தன. ஒரு டப்​பிங் தியேட்​டரில் நான் பேசப் போய்க்​கொண்​டிருந்​த​போது, எதிரில் அந்த இயக்​குநர் வந்​தார். என்​னைப் பார்த்​ததும், “நாலு பேருக்கு தெரிய மாதிரி பெரிய நடிக​ரா​யாச்​சு” என்​றார். “என்​னமோ இறைவன் செயல், எனக்​குன்னு உள்​ளது எனக்கு வரத்​தானே செய்​யும்” என்​றேன். அவர் போய்​விட்​டார்.

சில வருடங்​களுக்கு பிறகு ஒரு இடத்​தில் அவரை சந்​தித்​தேன். என்னை கட்​டிப்​பிடித்​து​விட்​டுப் பக்​கத்​தில் இருந்​தவர்​களிடம், “என்னை எத்​தனை நாளா இவருக்கு தெரி​யும்னு கேளுங்க” என்று சொன்​னார். நான் கண்டு கொள்​ள​வில்​லை. சினி​மா​வும் அரசி​யல் மாதிரி​தான். நிரந்தர நண்​பனும் இல்​லை, நிரந்தர எதிரி​யும் இல்லை. அந்த இணை இயக்​குநர் பிறகு பெரிய படங்​கள் இயக்கினார். அவர் படங்​களில் நடித்​தேன்.

இன்​னொரு இயக்​குநர் ஒரு​வர், சில படங்​கள் மட்​டுமே இயக்கி இருக்​கிறார். அவர் படத்​தில் தமிழை தவறாக உச்​சரிக்​கச் சொன்னார். தமிழில் அந்த வார்த்தை நீங்​கள் சொல்​வது போலவராது என்​றேன். “அந்த கேரக்​டர் தமிழை தப்பா பேசற மாதிரி இருந்தா பேசறேன். மற்​றபடி நீங்க சொல்​றது சரி​யில்​லை” என்​றேன். அவர், “கேரக்​டர்​லாம் பேசறீங்​களே, உங்​களுக்கு தமிழ் தெரி​யு​மா?” என்று கேட்​டார். உடனே சங்​கத்​தமிழில் இருந்து ஒரு பாடலைச் சொல்​லி, இந்​தளவுக்​குத் தமிழ் தெரி​யும் என்​றேன். பிறகு, “நீங்​கள் எனக்கு தமிழ் தெரி​யாது என்று சொன்​னால் சொல்லி​விட்டு போங்​கள், எனக்கு பிரச்​சினை​யில்​லை” என்​றேன். இதற்​காகவே அவர் என்னை அவமானப் படுத்​தி​னார்.

இதே போல சினி​மா துறை​யில் பலர் என்னை அவமானப் படுத்தி இருக்​கிறார்​கள். அதைக் கண்டு துவண்டு போக​வில்​லை. போராடிப் போராடி​தான் இன்று இறைவன் புண்​ணி​யத்​தில் ஓரளவுக்கு வந்​திருக்​கிறேன். உழைக்​கிறேன், உழைத்​துக் கொண்டிருக்​கிறேன். உழைத்​துக் கொண்டே இருப்​பேன். இன்று இளம் இயக்​குநர்​கள் “இந்த வசனத்தை எப்​படி பேசலாம்?” என்று கேட்கிற அளவுக்கு என் மேல் உரிமை எடுத்​துக்​ கொள்​கிறார்​கள். இந்​தளவுக்கு வாய்ப்பை கொடுத்​திருப்​ப​தற்​காக இறைவனுக்​கும்​ இயக்​குநர்​களுக்​கும்​ நன்​றி சொல்​கிறேன்​.

(திங்​கள்​தோறும் பேசுவோம்)

SCROLL FOR NEXT