விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ படத்தின் வெளியீடு அக்டோபர் 16-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது வரலாற்றின் இருண்ட பக்கம் இந்த அக்டோபரில் திறக்கப்படுகிறது. ‘ரணபாலி’ உலகெங்கிலும் அக்டோபர் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலாற்றுத் திரைப்படம் ‘ரணபாலி’. இந்தப் படத்தை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் உருவாகிறது. 19-ம் நூற்றாண்டு காலகட்டத்தில், 1854-57 ஆண்டுகளுக்கு இடையில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது நடந்த வரலாற்று சம்பவத்தின் அடிப்படையில் படம் உருவாக்கப்படுகிறது.
இந்தப் படத்தில், ‘தி மம்மி’ என்ற ஹாலிவுட் படம் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற ஆங்கில அதிகாரியாக நடிக்கிறார்.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்களின் திருமணத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
படம் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீடு அக்டோபர் 16-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் இந்த பான் இந்தியா படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு போஸ்டரில், விஜய் தேவரகொண்டா, பெரிய வீச்சரிவாளைத் தோளில் தாங்கியபடி ஆக்ரோஷமாக இருக்கிறார்.
பான் இந்தியா வெளியீடு, முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் போன்றவை படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.