‘ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் திரைப்படம், ‘வாரணாசி’. இதில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார். பிரியங்கா சோப்ரா நாயகியாகவும் பிருத்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், மாதவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஆர்ஆர்ஆர் ’ படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து ‘வாரணாசி’படத்துக்குச் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ஆக் ஷன் அட்வெஞ்சர் பேன்டஸி படமான இதன் கதையை ராஜமவுலியின் தந்தை, விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
இப்படம், 2027-ம் ஆண்டு ஏப்.7-ல் வெளியாகிறது. இதன் முக்கியமான காட்சிகள் கென்யா காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது இதன் படப்பிடிப்பு ஜார்ஜியா வில் நடைபெறுகிறது. இதற்காக மகேஷ்பாபு அங்கு சென்றுள்ளார். பிருத்விராஜ், பிரியங்கா சோப்ராவும் அங்கு செல்கின்றனர்.
படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் மாதம் முடிவடையும் என்றும் செப்டம்பர் மாதம் இதன் பின்னணி இசையைத் தொடங்க இருப்பதாகவும் இசை அமைப்பாளர் மரகதமணி தெரிவித்துள்ளார்.