நடிகை மாளவிகா மோகனன், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். அவர் பிரபாஸுடன் நடித்துள்ள ‘த ராஜா சாப்’ ஜன.9-ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் புரமோஷனில் மாளவிகா மோகனன் கூறும்போது, “நடிகர், நடிகைகளுக்கு இது அற்புதமான காலமாக இருக்கிறது. ஓடிடி மற்றும் சமூக ஊடகங்கள் காரணமாக மொழி எல்லைகள் மங்கிவிட்டன.
எந்த மொழியில் நல்ல படத்தைக் கொடுத்தாலும் அது மக்களுக்குப் பிடித்திருந்தால், பரவலாக சென்றடையும். மொழி தாண்டி வெற்றிபெறும் நிலைமை இருக்கிறது. இப்போதைய காலகட்டத்தைத் தனிப்பட்ட முறையில் மிகவும் விரும்புகிறேன். ஏனென்றால், இப்போது பல்வேறு துறைகளில் உள்ள முன்னணி கதாநாயகர்களுடனும் சிறந்த இயக்குநர்களுடனும் பணியாற்றி வருகிறேன்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் ஹிருதயபூர்வம், தமிழில் விக்ரமுடன் தங்கலான், விஜய்யுடன் மாஸ்டர், தெலுங்கில் பிரபாஸுடன் த ராஜா சாப் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். முன்னணி நடிகர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெவ்வேறு ஜானர் படங்களில் நடிப்பதையும் பலவிதமான இயக்குநர்களிடம் பணியாற்றுவதையும் விரும்புகிறேன்.
தங்கலானில் பழங்குடி தெய்வமாக நடித்தேன். ஹிருதயபூர்வம் படத்தில் புனேவைச் சேர்ந்த யதார்த்தமான நகரத்துப் பெண், த ராஜா சாப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் என முற்றிலும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறேன். ஒரு நடிகையாக என்னை நானே ஆராய்ந்து பார்ப்பதும் பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.