நடிகை நித்யா மேனன்
ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ படம் கடந்த 4ம் தேதி வெளியானது. அதில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம் மிகவும் கவர்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதற்கு இப்படத்தின் இயக்குநர் புச்சி பாபு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் ஜான்வி கபூருக்கு ஆதரவாக திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை நித்யா மேனன் கூறும்போது, “திரைப் படங்களில் பெண்களை கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவது என்பது தென்னிந்திய சினிமாவுக்கு மட்டுமே உரியப் பிரச்சினை அல்ல; இது ஒட்டுமொத்த திரையுலகிலும் இருக்கும் பொதுவான போக்குதான். வணிக ரீதியான வெற்றிக்காகவும், ரசிகர்களைக் கவர்வதற்காகவும் மட்டுமே இத்தகைய காட்சிகள் வைக்கப் படுகின்றன.
இது எல்லை மீறிப் போகிறதா என்று கேட்டால், ‘நிச்சயமாக ஆமாம்’ என்று தான் சொல்வேன். இதற்காக, நடிகைகள் தங்களுக்கென்று சில எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு காட்சியில் நடிக்கும் போதே, தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும், தன்னை கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூற வேண்டும்.
நாம் நம் உரிமையை நிலைநாட்ட முடியும். அது அவரவர் முன்னுரிமையைப் பொறுத்தது. புகழ் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவர்கள் எதற்கும் துணிகிறார்கள். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே நடிகைகள் தங்களின் எல்லைகளைத் தெளிவாகத் தெரிவிப்பது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.