பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழில், ராஜ பார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை எக்ஸ் பிரஸ் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
94-வது வயதான சிங்கீதம் சீனிவாச ராவ், ‘சிங் கீதம்’ என்ற படத்தை இப்போது இயக்கி முடித்திருக்கிறார். இதில் அயான், அகல்யா பாம்ரூ, ஷாலினி கொண்டேபுடி உள்பட பலர் நடித்துள்ளனர். அன்குர் சி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இதை வைஜயந்தி மூவிஸ் வழங்க, இயக்குநர் நாக் அஸ்வின் தயாரித்துள்ளார். ஜூன் 11-ல் வெளியாகும் இந்தப் படத்தின் ‘பிரி ரிலீஸ்’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்துகொண்டனர்.
அதில் கமல்ஹாசன் பேசும்போது. “மாயாபஜார் முதல் தற்போதைய ‘சிங் கீதம்’ வரை, சிங்கிதம் சீனிவாச ராவிடம் எந்த மாற்றமும் இல்லை. சினிமா அவரிடமே உள்ளது. இது மிகவும் அரிதாக நடக்கும் விஷயம். எனக்கு 20 வயதாக இருந்தபோதே அவருடன் பணியாற்றத் தொடங்கினேன். அவருடைய படங்களில் தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் என்னிடம் 2 கதைகளைச் சொன்னார்.
ஒன்று ‘புஷ்பக விமானம்’ என்ற படமாக வெளியானது. இப்போது 2-வது கதை ‘சிங் கீதம்’ என்ற திரைப்படமாக வெளியாகப் போகிறது. எனக்கு 20 வயதாக இருந்த போது அந்தக் கதையைக் கேட்டேன். இப்போது எனக்கு 70 வயதாகிறது. இப்போது நான் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன். சில யோசனைகள், சில கதைகள் காலத்தால் அழியாதவை. சிங்கீதம் சாரின் கதைகளும் அப்படித் தான். அவை காலத்தால் அழியாதவை.
பலர் சிங்கீதம் சாரின் பெயரை ‘சங்கீதம்’ என்று உச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் மூலம், அந்தக் குழப்பம் இருக்காது. இனி எல்லோரும் அவரை ‘சிங்கீதம்’ என்றே அழைப்பார்கள். சிங்கிதம் சார் இப்போதும் ஜென்-ஸியை விட முன்னணியில் இருக்கிறார். இன்று அவரைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. நான் இப்போதும் அவருடைய உதவி இயக்குநராக இருக்க விரும்புகிறேன். சினிமா என்பது பேரார்வத்துடன் செய்யப்பட வேண்டிய ஒரு படைப்பு. அவர்கள் இந்தப் படத்தை அத்தகைய பேரார்வத்துடன் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறார்கள்” என்றார்.