சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம்ஆண்டு வெளியான படம், ‘த கேரளா ஸ்டோரி’. கேரளாவில் 32 ஆயிரம் இந்துப் பெண்களை மதமாற்றம் செய்து, தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாகவும், அவர்களைத் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதாகவும் அந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றன.
அதில் அடா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது.இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. பிப்.27-ல் வெளியாக இருக்கும் இதை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்ளார்.
இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் சர்ச்சை வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்துப் பெண்களை மதம் மாற்றுவது தொடர்பான வசனங்களும், கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “முதல் பாகத்தின் வகுப்புவாத அஜெண்டாவையும் அப்பட்டமான பொய்களையும் ஏற்கெனவே மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். நமது மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சிதைக்கும் இந்த முயற்சியையும் கேரளா நிராகரிக்கும். வகுப்புவாத மோதல்களைத் தூண்டும் இத்தகைய புனையப்பட்ட கதைகளுக்கு அனுமதி வழங்குவது அதிர்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.
இந்நிலையில், கேரளாவை தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப் பட்டிருப்பதாகக் கூறி கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவ் நம்பூதிரி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், திரைப்பட தணிக்கை வாரியம் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை பிப். 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இதனால் இப்படம் பிப். 27-ம் தேதி திட்டமிட்டபடி திரைக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.