கன்னடத்தில் உருவான ‘கேடி : தி டெவில்’ என்ற படத்தில் துருவா சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, வி.ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் இயக்கிய இப்படத்தின் இந்திப் பதிப்பில் இடம்பெற்றிருந்த குத்துப் பாடல் சர்ச்சையில் சிக்கியது. அப்பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்சய் தத் இணைந்து ஆடியிருந்தனர்.
ஆபாசமான வார்த்தைகள் இருப்பதாக கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்தப் பாடலுக்கு தடை விதித்தது. அப்பாடல் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இப்பாடல் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த நோரா ஃபதேஹி, இப்பாடலின் கன்னட பதிப்பில் மட்டுமே தான் நடித்ததாகவும் இந்திப் பாடல் பற்றி ஏதும் தெரியாது என்றும் கூறியிருந்தார்.
இப்பாடல் விவகாரத்தில் ஏப்ரல் மாதம் சஞ்சய் தத் ஆஜராகி மன்னிப்புக் கோரியிருந்தார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், 50 பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக உறுதியளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஆஜரான நோரா ஃபதேஹி, இந்த விவகாரத்துக்காக மன்னிப்புக் கேட்டார். பின்னர் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி உதவி வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.