பிரியதர்ஷன் இயக்கும் அவருடைய 100-வது படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தனது முதல் பட கதாநாயகனே 100-வது படத்திலும் நாயகனாக நடிப்பது பெருமை; இதுபோன்று சினிமா வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை’ என்று பிரியதர்ஷன் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படம் பற்றி பேசியுள்ள அவர், “இது கர்னாடக இசை பின்னணியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம். அப்பா- மகனை பற்றிய கதையைக் கொண்ட படம். இதில் 12 பாடல்கள் இடம்பெறும். கமர்ஷியல் அம்சங்களையும் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளையும் இணைத்த கதைக்களத்தைக் கொண்டிருக்கும். படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
மோகன்லாலின் தந்தையாக நடிப்பதற்குப் புதுமுகத்தைத் தேடி வருகிறோம். கர்னாடக மற்றும் இந்துஸ்தானி இசை மட்டுமின்றி, கதகளி கலையிலும் தேர்ச்சி பெற்ற முதிய கலைஞர் தேவைப்படுகிறார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிருடன் இருந்திருந்தால், இப்பாத்திரத்துக்கு அவரைத்தான் அணுகியிருப்பேன்” என்றார். இப்படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.