தென்னிந்திய சினிமா

‘துரந்தர் 2’ படக்குழு மீது அதிருப்தியில் யஷ் - பின்னணி என்ன?

ப்ரியா

பெங்களூரு: கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ‘துரந்தர்’. ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனால் இதே தேதியில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படமும் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

          

‘கே.ஜி.எஃப்’ வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் சமூக வலைதளங்களில் சூட்டை கிளப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழலில் ‘துரந்தர்’ படக்குழுவின் இந்த முடிவால் யஷ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மரியாதைக்காக தன்னிடம் ‘துரந்தர்’ படக்குழுவினர் ஆலோசித்திருக்கலாம் என்று அவர் கருதுவதே இந்த அதிருப்திக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 

பொதுவாக, தென்னிந்திய திரையுலகில் ஒரு பெரிய நடிகரின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், மற்ற தயாரிப்பாளர்கள் ஒரு மரியாதை நிமித்தமாக சம்பந்தப்பட்ட படக்குழுவுடன் ஆலோசிப்பது வழக்கம். ஆனால் ‘துரந்தர்’ படக்குழு ரிலீஸ் தேதி தொடர்பாக இதுவரை எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுவது மட்டுமின்றி, வசூலிலும் பாதிப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் 'டாக்ஸிக்' திரைப்படம், 2023, மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படம் தாமதமானது. மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் தன் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத யஷ், எக்காரணம் கொண்டும் ரிலீஸ் தேதியை மாற்றப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

SCROLL FOR NEXT