‘ஆவேஷம் 2’ கதை விவாதம் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஜீத்து மாதவன் தெரிவித்துள்ளார்.
‘ஆவேஷம்’ படத்தைத் தொடர்ந்து ‘சூர்யா47’ படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து மாதவன். இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கேரளாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் ஜீத்து மாதவன். அப்போது பத்திரிகையாளர்கள் ‘சூர்யா47’ குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு ஜீத்து மாதவன், “’சூர்யா47’ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது ஒரு முழுமையான தமிழ் படமாக இருக்கும். இதில் நஸ்லின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ஃபஹத் பாசிலுடன் ‘ஆவேஷம் 2’ படத்துக்கான விவாதம் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிலால் ‘ஆவேஷம்’ படத்தின் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். ஏனென்றால் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆவேஷம்’. மலையாளம் மட்டுமன்றி இதர மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.