தவறாக அடையாளம் காட்டப்பட்டதால் ஒரு நிரபராதியின் மொத்த குடும்பமும் சிதைந்து போவதுதான் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ‘த ராங் மேன்- 1956’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை. நியூயார்க் நகரின் ஸ்டார்க் கிளப்பில் ‘ஸ்ட்ரிங் பேஸ்’ இசைக் கருவியை வாசிக்கும் கலைஞன், கிறிஸ்டோபர் இமானுவேல் மேனி பேலெஸ்ட்ரேரோ, கச்சேரியை முடித்துவிட்டு ஒரு ரயிலில் பயணிக்கிறான். கையில் இருக்கும் பேப்பரில், ரேஸ் பகுதியை வட்டமிடுகிறான்.
வீட்டுக்கு வந்தால் மனைவியும், இரு மகன்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனைவி ரோஸ் எழுந்து விடு கிறாள். அவளுக்கு சில நாட்களாகப் பல் வலி. டாக்டர் சொன்ன பீஸ், பல்லைவிட வலிக்கிறது.
நான்கு பற்களைச் சரி செய்ய 300 டாலர் கேட்டிருக்கிறார். வாரத்துக்கு 85 டாலர் சம்பளம் வாங்கும் பேலெஸ்ட்ரேரோவுக்கு இது பெரும்தொகை. அடுத்தநாள் வங்கிக்குச் சென்று மனைவியின் இன்சூரன்ஸ் பாலிசியில் கடன் கேட்கிறான். அவனைப் பார்த்ததும் வங்கி காசாளரான அந்தப் பெண் ஷாக் ஆகிறாள்.
சக ஊழியரிடம் “சத்தம் போடாம மெதுவா திரும்பி பாரு” என்று பேலெஸ்ட்ரேரோவைக் காட்டுகிறாள். அவள் சின்ன அதிர்ச்சியுடன் இன்னொரு பெண்ணிடம் காட்ட, “அவன்தான்” என 3 பேரும் மெதுவாகப் பேசிக் கொள்கிறார்கள். பிறகு ‘`உங்க மனைவி வந்தா லோன் கிடைக்கும்'’ என்று அனுப்பி விட்டு போலீஸுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.
பேலெஸ்ட்ரேரோ வீட்டுத்திரும்பி, படியேறும் முன், 2 டிடெக்டிவ்கள் அவனை காரில் ஏற்றுகிறார்கள். இன்சூரன்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல, நியூயார்க் நகரின் வேறு பகுதியில் நடந்த சில கொள்ளைச் சம்பவங்களிலும் அவனுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுகிறார்கள். சில கடைகளுக்கு அழைத்துச் சென்று “சும்மா கடைசிவரைக்கும் போயிட்டு வாங்க” என்று அனுப்புகிறார்கள். பேலெஸ்ட்ரேரோ குழப்பத்துடன் கடைகளுக்குள் ‘கேட்வாக்’ சென்று திரும்புகிறான்.
பேப்பர் பேனா கொடுத்து ஒரு வாசகத்தை ‘டிக்டேட்’ பண்ணுகி றார்கள். நம்ப முடியாத ஒற்றுமை! குற்றவாளி ‘டிராயர்’ என்று எழுதுவதற்குப் பதில் ‘டிரா’ என எழுதியதுபோல் பேலெஸ்ட்ரேரோவும் எழுதி இருக்கிறான். ‘ஐடென்டிஃபிகேஷன் பரேட்’டில் பல குற்றவாளிகளுக்கு மத்தியில் மூன்று பெண்களும் பேலெஸ்ட்ரேரோவை அடையாளம் காட்டுகிறார்கள். போதாதா? ஒன்றுமே புரியாமல் கைதாகிறான்.
அடுத்த நாள் நீதிமன்றம் வந்த ரோஸைப் பார்த்து பேலெஸ்ட்ரேரோ ஃபீல் பண்ணுகிறான். அவரை தங்கையின் கணவர் பெயிலில் எடுக்கிறார். வழக்கில் வாதாட ‘பிராங்க் ஓ கானர்’ என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்கிறார்கள். “குற்றம் நடந்த நாட்களில் எங்கே இருந்தீர்கள்? என்பது சாட்சியத்தோடு வேண்டும்” என்று அவர் கேட்கிறார்.
முதல் குற்றம் நடந்தபோது விடுமுறைக்காக சென்ற இடத்தில் 3பேருடன் சீட்டாடியது ஞாபகம் வருகிறது. ரோஸும், பேலெஸ்ட்ரேரோவும் அவர்களைத் தேடிச் செல்ல, 2 பேர் இறந்திருக்கிறார்கள். ஒருவர் மாயம்! எங்கு அலைந்தும் சாட்சிகள் கிடைக்காத விரக்தியில் ரோஸ் ‘லகலகலக’வென சிரிக்கிறாள்.
‘என்னாலதான் அவருக்கு இப்படி ஆயிருச்சு’ என்று நிலைகுத்திய பார்வையுடன் ரோஸ் பேச, வழக்கறிஞர் அவளது நடவடிக்கையின் விநோதம் உணர்ந்து மருத்துவரைப் பார்க்கச் சொல்கிறார். 2 நாளாக ரோஸ் தூங்கவில்லை.
பேலெஸ்ட்ரேரோ டாக்டரைப் பார்க்கலாம் என்று அழைக்க, அவனிடம் வாக்குவாதம் செய்த ரோஸ், ஒரு பெரிய மரச் சீப்பால் அவன் தலையில் அடிக்கிறாள். பேலெஸ்ட்ரேரோவுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறது. ரோஸை பரிசோதித்த டாக்டர் ‘மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள்’ என்று சொல்ல, பேலெஸ்ட்ரேரோ அதிர்ச்சியடைகிறான். ரோஸ் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நடைப் பிணமாகிறாள்.
ஒருவழியாக, உண்மைக் குற்றவாளி சிக்கி, பேலெஸ்ட்ரேரோ நிரபராதி என விடுவிக்கப்படுவதுதான் கிளைமாக்ஸ். சரியாகத் திட்டமிட்டு வாழும் சாதாரண மனிதனின் வாழ்க்கை, தவறான அடையாளம் காட்டுதலால் தடம் மாறுகிறது. அவன் விடுதலையானாலும் அவன் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? படம் முடிந்ததும் எழும் மிகப் பெரிய கேள்வி இது.
படத்தின் ஆரம்பத்தில் ஹிட்ச்காக் திரையில் பேசுகிறார். “நான் இதுக்கு முன்னாடி வித விதமான சஸ்பென்ஸ் படங்கள் கொடுத்திருக்கேன். இந்த தடவை உண்மைக் கதையை எடுத்திருக்கேன். இதில் இருக்கும் விஷயங்கள் இதுக்கு முன்னே எடுத்த புனைகதைகளை விட, ரொம்ப விநோதமா இருக்கு” என்கிறார்.
மேக்ஸ்வெல் ஆண்டர்சன் எழுதிய கதையை வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஹிட்ச்காக் எடுத்தவிதம் சஸ்பென்ஸ் படங்களைவிட மேலானது. ராபர்ட் பர்க்ஸின் ஒளிப்பதிவும், பெர்னார்டு ஹெர்மனின் இசையும், ஜார்ஜ் டொமாசினியின் எடிட்டிங்கும் படம் முழுவதும், ‘ஐயையோ என்ன ஆகுமோ?’ என்ற பதற்றத்துடனும், ‘கடவுளே, எதுவும் ஆகிவிடக் கூடாது’ என்ற ஏக்கத்துடனும் நம்மை பயணப்பட வைக்கிறது.
“இந்த உண்மைக் கதையை நம்ப முடியவில்லையா? நியூயார்க், க்வீன்ஸ் கவுண்டி நீதிமன்ற பதிவுகளைப் பாருங்கள். ஏப்ரல் 21, 1953, குற்றப் பத்திரிகை எண் 271/53, ‘த பேலெஸ்ட்ரேரோ கேஸ்” என்று படத்துக்கு விளம்பரப்படுத்தினார்கள். படம் முழுவதும் ஹிட்ச்காக்கின் முத்திரைகள்தான்.
பேலெஸ்ட்ரேரோ கச்சேரி முடிந்து செல்லும்போது இரு போலீஸ்காரர்கள் அவன் பின்னால் செல்வதை படம் முழுவதும் போலீஸ் அவனை துரத்தப் போவதுபோல் சிம்பாலிக்காக உணர்த்துகிறார். இங்குமங்கும் கேமரா வேகமாக அலைவதன்மூலம் பேலெஸ்ட்ரேரோ சிறையில் குழப்பமாக இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். கோபத்தில் கணவனை ரோஸ் தாக்கும்போது அந்த ஃபிரேம் உடையும். ஆனால், அங்கே உடைந்தது குடும்பம்!
பேலெஸ்ட்ரேரோவாக நடித்த ஹென்றி ஃபோண்டா, ஒரு நடுத்தர குடும்பத்து மனிதனின் மனதில் எப்போதும் இருக்கும் கவலையை அழகாக வெளிப்படுத்துகிறார். உண்மையான குற்றவாளியை நேரில் சந்திக்கும்போது “டேய் உன்னால என் மனைவிக்கு என்ன ஆச்சு தெரியுமா?” என்று கத்தும்போதும், பொம்மை போல் பதில் சொல்லும் மனைவியைப் பார்த்து கலங்கும்போதும் எதிலுமே நடிப்பு என்று தெரியவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லத் தோன்றுகிறது, நமக்கு.
கணவன்மேல் அதீத அன்பு கொண்ட ரோஸாக, நடிகை வேரா மைல்ஸ் சிரிக்கும்போது அழகிய மலராகவும், மனநிலை பாதிக்கப்பட்டபோது இறுகிப் போன முள்ளாகவும் காட்சியளிக்கிறார். அந்தோணி குவேல், நீதிக்குப் போராடும் வழக்கறிஞர் பிராங்க் ஓ கானராக வருகிறார். பேலெஸ்ட்ரேரோ குடும்பத்துக்காக அவர் இரக்கப்படுவது நம்மை அவர்மீது இரக்கப்பட வைக்கிறது.
இன்சூரன்ஸ் கம்பெனி, மாவட்ட அட்டர்னி, போலீஸ் துறை என அத்தனைபேர் ஒத்துழைப்புடன் தவறுதலாக அடையாளம் காட்டப்பட்ட ஒரு நிரபராதி விசாரிக்கப்படுவது முதல், விடுதலை ஆகும்வரை அரசாங்க நடைமுறைகளை ஒரு கேமேராவை ஒளித்துவைத்து பதிவு செய்தது போல செய்திருக்கிறார், ஹிட்ச்காக்.
இதனாலேயே பிரெஞ்சு புதிய அலை இயக்குநர் ஜான் லூக் கோடார்ட், இந்தப் படம் ஒரு டாக்குமென்ட்ரியின் நேர்மையுடன் எடுக்கப்பட் டிருப்பதாகப் பாராட்டினார். மார்ட்டின் ஸ்கார்சசி, ‘ராங் மேன்’ தனது படைப்புகளை ஆழமாகப் பாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். திடுக்கிடும் காட்சிகள் மூலம் நம் இதயங்களைப் படபடக்க வைக்கும் ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் இப்படம் முழுவதும் கண்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார். கர்ச்சீப் உதவியுடன் எந்தக் காலத்திலும் ரசிக்கலாம் இப்படத்தை.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)