காதலிக்க மறுத்தவனை தற்கொலை முயற்சியால் காதலித்தவள், விலகிச் செல்ல முயற்சித்தவனை உலகை விட்டு அனுப்புவது ‘சன்செட் பவுலேவார்டு’ (SUNSET BOULEVARD -1950) திரைப்படத்தின் ஒருவரிக்கதை. சன்செட் பவுலேவார்டு சாலையில் உள்ள ஒரு மாளிகையின் நீச்சல் குளத்தில், திரைக்கதை எழுத்தாளர் ஜோ கில்லிஸின் சடலம் மிதக்கிறது.
ஒரு சடலமே தனது மரணத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளை விவரிக்கும் ‘வாய்ஸ்-ஓவர்’ பாணியில் படம் தொடங்குகிறது. 3 மாதத் தவணை கட்டவில்லை என்று ஜோவின் காரை ஜப்தி செய்ய வருகிறார்கள். கடன்காரர்களிடமிருந்து தப்பிக்க முயலும் ஜோ, தற்செயலாக மவுனப்பட காலத்து நட்சத்திரம் நார்மா டெஸ்மாண்டின் மாளிகைக்குள் நுழைகிறான்.
முதலில் அவனை, தன் குரங்குக்குச் சவப்பெட்டி கொண்டு வந்தவன் என நினைக்கும் நார்மா, பிறகு அவன் ஓர் எழுத்தாளன் என அறிந்து, தான் எழுதிய ‘சலோமி’ திரைக்கதையைச் செப்பனிட அவனைத் தன் வீட்டிலேயே தங்க வைக்கிறாள்.
அவனுக்கு புது உடுப்புகள், விலை உயர்ந்த பரிசுகள் வாங்கிக் கொடுத்து மகிழ்கிறாள். புத்தாண்டு விருந்தின்போது நார்மா தனது காதலை வெளிப்படுத்த, ஜோ ஏற்க மறுக்கிறான். ஆத்திரமடைந்த நார்மா அவனை அறைந்துவிட்டுத் தனிமையில் முடங்குகிறாள்.
அங்கிருந்து வெளியேறித் தனது நண்பன் ஆர்டியைச் சந்திக்கும் ஜோ, முன்பு தன் கதையை விமர்சித்த பெட்டி என்ற இளம்பெண்ணை அங்கு சந்திக்கிறான். பெட்டி அவனது பழைய திரைக்கதையில் உள்ள சில காட்சிகளைப் பாராட்டுகிறாள். ஜோ தனது பொருட்களை எடுப்பதற்காக அழைக்கும்போது, நார்மா தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சித் தகவலை மேக்ஸ் கூறுகிறான்.
தார்மீகக் குற்ற உணர்ச்சியால் மீண்டும் மாளிகைக்கே திரும்பும் ஜோ, நார்மாவுடன் நெருக்கமான உறவில் பிணைக்கப்படுகிறான். நார்மா, தான் திருத்திய ‘சலோமி’ திரைக்கதையை பாராமவுண்ட் ஸ்டூடியோவிலுள்ள புகழ்பெற்ற இயக்குநர் சிசில் பி.டெமிலுக்கு அனுப்பி வைக்கிறாள். ஸ்டூடியோவிலிருந்து அழைப்புகள் வரத் தொடங்குகின்றன. நார்மா அவரைச் சந்திக்கச் செல்கிறாள். ஆனால் டெமிலின் உதவியாளர்தான் அவளது பழைய காரை படப்பிடிப்புக்கு கேட்பதற்காக அழைத்தார் என்பதை அறிந்து அவளை சமாளித்து அனுப்பி விடுகிறார்.
டெமிலைச் சந்தித்த பிறகு யதார்த்தம் புரியாமல், மீண்டும் திரையில் தோன்றத் தீவிர அழகு சிகிச்சைகளில் ஈடுபடுகிறாள் நார்மா. ஜோ, இரவுகளில் ரகசியமாக பெட்டி-யைச் சந்தித்துத் திரைக்கதை விவாதங்களில் மூழ்குகிறான். இதை அறியும் நார்மா, பெட்டியிடம் ஜோ பற்றி அவதூறு பரப்ப முயல்கிறாள்.
ஆத்திரமடைந்த ஜோ, பெட்டியை நேரில் வரவழைத்து, தான் ஒரு சுயநலவாதி என நடித்து அவளைப் பிரித்து அனுப்பிவிடுகிறான். பின் தானும் அந்த மாளிகையை விட்டு வெளியேற முடிவெடுத்து நார்மாவிடம் “உன்னை உலகம் மறந்துவிட்டது, உனக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் பொய்” என்ற கசப்பான உண்மைகளைப் போட்டுடைக்க, அதைத் தாங்க முடியாத நார்மா, ஜோவைத் துப்பாக்கியால் சுட, அவன் பிணமாக நீச்சல் குளத்தில் விழுகிறான்.
போலீஸாரும் பத்திரிகையாளர்களும் அந்த மாளிகையைச் சூழ்கிறார்கள். நார்மா முழுமையாகத் தன் சுயநினைவை இழந்து, தான் ஒரு திரைப்படப் படப்பிடிப்பில் இருப்பதாக நம்புகிறாள். அதை உணர்ந்த மேக்ஸ் ‘ஆக் ஷன்’ சொல்ல, அந்த மாளிகையின் படிக்கட்டுகளில் ஒரு பேரரசியைப் போல இறங்கி வருகிறாள்.
செய்தி கேமராக்களை நோக்கி, “மிஸ்டர் டெமில், நான்எனது க்ளோஸ்-அப் காட்சிக்குத்தயார்” என்று அவள் சொல்லும் அந்த ஒரு வசனத்துடன் படம் முடிவடைகிறது.
‘சன்செட் பவுலேவார்டு’ வெறும் புனைவல்ல; ஹாலிவுட் தனது கலைஞர்களை எப்படித் தூக்கியெறிகிறது என்பதற்கான சாட்சியாக இப்படத்தைப் பில்லி வைல்டர் உருவாக்கியிருக்கிறார்.
இதை நிரூபிக்க நிஜமான திரை ஆளுமைகளை அவர்கள் பெயரிலேயே நடிக்க வைத்தார். நிஜ வாழ்க்கையிலும் ஸ்வான்சனை (நார்மா) ஒரு ‘சூப்பர் ஸ்டாராக’ மாற்றிய இயக்குநர் சிசில் பி. டெமில், படத்தில் தனது படப்பிடிப்புத் தளத்திலேயே தோன்றி, பழைய நாயகிக்குத் தன்னிடம் இனி இடமில்லை என்பதை மவுனத்தால் உணர்த்துகிறார்.
மவுனப் பட மேதை பஸ்டர் கீட்டன் வார்த்தைகளின்றிச் சீட்டு விளையாடும் ‘மெழுகுச் சிலை’களில் ஒருவராகத் தோன்றி ஒரு யுகத்தின் முடிவை உணர்த்துகிறார். நார்மாவின் ஓட்டுநராக வரும் எரிக் வான் ஸ்ட்ரோஹெய்ம், நிஜத்திலும் ஸ்வான்சனை இயக்கிய மாபெரும் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர் ஹெடா ஹாப்பரும் நிஜப் பத்திரிகையாளராகவே நடித்திருக்கிறார். நார்மா டெஸ்மாண்டாக நடித்த குளோரியா ஸ்வான்சன், மவுனப் படக் காலத்தின் நாடகத்தன்மையையும் நவீன உளவியல் நடிப்பையும் தன் கண்களின் தீவிரத்தால் இணைத்து நடிப்பில் புது பரிமாணம் காட்டியிருக்கிறார். வறுமையில் வாடும் எழுத்தாளரின் (ஜோ கில்லிஸ்) விரக்தியான மனநிலையை ‘வில்லியம் ஹோல்டன்’ மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஜான் எஃப். சீட்ஸின் ஒளிப்பதிவு, ‘ஃபிலிம் நாய்ர்’ பாணியின் உச்சத்தைத் தொடுகிறது. படத்தில் வரும் ஆழமான நிழல்களும், குறைந்த ஒளியும் நார்மாவின் சிதைந்த மனநிலையின் காட்சிக் குறியீடுகளாகின்றன. குறிப்பாக, நீச்சல் குளத்தின் அடியிலிருந்து எடுக்கப்பட்ட அந்தத் தொடக்கக் காட்சி இன்றும் வியக்க வைக்கிறது.
எடிட்டர் ‘ஆர்தர் ஷ்மிட்’ நகர வாழ்க்கையின் வேகத்தை அதிவேக ரிதமிலும், நார்மாவின் மாளிகைக்குள் நிலவும் தேக்கமான சோகத்தை நீளமான காட்சிகளாகவும் மாற்றி, பார்வையாளர்களுக்கு உளவியல் அழுத்தத்தைத் தருகிறார்.
ஃபிரான்ஸ் வாக்ஸ்மேனின் இசையும், எடித் ஹெட்டின் ஆடை வடிவமைப்பும் படத்தின் ஆன்மாவை மேலும் வலுப்படுத்துகின்றன. நார்மாவுக்கான நாடகமயமான இசையும், ஜோவுக்கான நவீன பின்னணி இசையும் கதாபாத்திரங்களின் முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. நார்மாவின் ஆடைகளோ, அவளது கடந்த காலக் கம்பீரத்தையும் தற்போதைய மாயையையும் ஒருசேரக் காட்சிப்படுத்துகின்றன.
‘சன்செட் பவுலேவார்டு’ ஒரு கதையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான பாடப்புத்தகம் மட்டுமல்ல; உலக சினிமா வரலாற்றின் மிகச்சிறந்த நடிப்புத் திறமைக்கான சாட்சியும் கூட.
இயக்குநர் பில்லி வைல்டர், சார்லஸ் பிராக்கெட் மற்றும் மார்ஷ்மேன் ஜூனியருடன் இணைந்து உருவாக்கிய திரைக்கதை, உலக சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. படத்தின் தொடக்கத்திலேயே நாயகனின் மரணத்தைக் காட்டிவிட்டு, அந்த முடிவு எப்படி நிகழ்ந்தது என்பதை நோக்கிப் பின்னோக்கி நகரும் இந்த முடிவில் இருந்து தொடங்கும் உத்தி (Ending-first narrative) படத்துக்கு தனித்துவமான அடையாளம் தருகிறது.
இது ‘நாய்ர்’, காமெடி, துன்பியல், நையாண்டி மற்றும் உளவியல் நாடகம் என அனைத்தும் கலந்த ஓர் அபூர்வக் கலவை. ஹாலிவுட் தனது ஆன்மாவை தானே கண்ணாடியில் தரிசித்த தருணம். 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு மூன்றைக் கைப்பற்றிய இத் திரைக்காவியத்தை ஒவ்வொரு சினிமா ஆர்வலரும் காண வேண்டியது அவசியம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com