விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள், விநோதமான முறையில் தீவு பங்களாவில் தீர்த்துக் கட்டப்படுவதே ‘அண்டு தென் தேர் வர் நன்’ (AND THEN THERE WERE NONE - 1945) திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
ஆக்ரோஷமான அலைகளுக்கு நடுவே, ஒரு படகு ஆடி அசைந்து தீவு பங்களாவை நோக்கிச் செல்கிறது. அதில் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத டாக்டர், ஜெனரல், டிடெக்டிவ், நீதிபதி, செகரட்டரி உள்பட எட்டு பேர் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு கடிதம் எழுதி வரவழைத்த, யு என் ஓவன் என்பவர் இரவு வந்து விடுவார் என்று வேலைக்காரன் தாமஸ் சொல்கிறான்.
அவர்கள் தங்குவதற்குத் தனித்தனி அறைகள் ஒதுக்கிக் கொடுக்கிறான். அவனது மனைவி எதல் ரோஜர்ஸ் டின்னர் ஏற்பாடு செய்கிறார்.நிகிடா ஸ்டார்லொஃப் என்பவர் தன்னை அறிமுகம் செய்கிறார்.
அதற்குப்பின் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அங்கே மேஜையில் ‘டென் லிட்டில் இண்டியன்ஸ்’ எனப்படுகிற பத்து சிறு பொம்மைகள் இருக்கின்றன.
நிகிடா அங்குள்ள பியானோவில் அந்த சிற்றிந்தியர்கள் பற்றிய பாடலை வாசிக்கிறார். அந்தப் பாடல் சிறுவர்களின் ரைம்ஸ்போல இருந்தாலும் விபரீத அர்த்தம் கொண்டது. “ஒருவன் மூச்சுத் திணறி இறந்தான். மீதி ஒன்பது பேர்.
ஒருவன் அதிக நேரம் தூங்கிவிட்டான். மீதி எட்டுப் பேர். ஒருவன் விறகு வெட்டப் போனான். தன்னையே வெட்டிக்கொண்டான். மீதி ஆறுபேர், கடைசி ஆள், தனியாக இருந்தான். தூக்குப் போட்டு இறந்தான். அதன் பிறகு ஒருவரும் இல்லை” என்று அந்தப்பாடல் முடிவடைகிறது.
தாமஸ், கிராமஃபோன் ரெகார்டை ஆன் பண்ண, அதில் ஒலிக்கும் ஓவனின் குரல் அங்கிருக்கும் பத்துப் பேர் செய்த குற்றங்களையும் சுட்டிக் காட்டுகிறது. ஜெனரல் ஜான் மாண்ட்ரேக் “அத தூக்கிப் போடு” என்று கத்த, தாமஸ் “காலைல 9 மணிக்கு அந்த கிராமஃபோன ஆன் பண்ணணும்ங்கறது ஓவனோட உத்தரவு” என்கிறான்.
“யார் அந்த ஓவன்?” என்று வந்தவர்கள் யாருக்கும் தெரியவில்லை. “முன்னப்பின்ன தெரியாவன் அழைச்சதை நம்பியா வந்தோம்?” என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். இங்கிருந்து தப்பித்துப் போகலாம் என்று முடிவெடுக்க, தாமஸ் “படகு இல்லாமல் தப்பிக்க முடியாது. திங்கள்கிழமைதான் படகு வரும். இன்று வெள்ளிக்கிழமை” என்கிறான்.
“ஏன் தப்பிச்சுப் போக நினைக்கிறீங்க? இந்த அட்வெஞ்சரை என்ஜாய் பண்ணுங்க. நான் தப்பு பண்ணது உண்மைதான்” என்று ஒரு கிளாஸ் சரக்கு எடுத்து குடிக்கும் நிகிடா, மூச்சுத் திணறி சாகிறான். அந்த பொம்மையில் ஒன்று உடைந்து கிடக்கிறது. பிறகு வேலைக்காரி ஏதெல் ரோஜர்ஸ், மாரடைப்பால் தூக்கத்திலேயே இறந்து போகிறாள்.
பாடல் வரிகளுக்கேற்ப மரணங்கள் நிகழ்கின்றன என்பதை அனைவரும் உணர்கிறார்கள். ஜெனரல் மாண்ட்ரேக் குத்தப்பட்டுச் சாகிறார். “அந்த ஓவன் வெளியில இல்லை. நமக்குள்ள ஒருத்தன்” என்று நீதிபதி சொல்கிறார்.
ஒருவரையொருவர் சந்தேகப்படுகிறார்கள். கண்காணிக்கிறார்கள். பொம்மைகள் உடைக்கப்படுகின்றன. எப்போதும் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருக்கும் ஆன்ட்டி மிஸ் பிரெண்ட், ஊசிபோட்டு கொல்லப்படுகிறாள். நீதிபதியும் நெற்றியில் துப்பாக்கி பொட்டு வைக்கப்பட்டு சாகிறார்.
அந்தப்பாடலின் வரிகளுக்கேற்ப வரிசையாகக் கொல்லப்படுகிறார்கள். அனைவரையும் கொன்றது யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? என்பதை ரத்தமின்றி அமைதியான முறையில் காட்டுவதே படம். பைபிள் மற்றும் ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிகம் விற்பனையான புத்தகங்களை எழுதியவர், அகதாகிறிஸ்டி.
‘மர்மக் கதைகளின் அரசி’ என்று அழைக்கப்படும் இவரின் பெரும்பாலான கதைகள் ஓடும் ரயில், நடுக்கடலில் உள்ள கப்பல் அல்லது தனித்தீவு என்று ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ளே நடக்கும். ‘முடிந்தால் கண்டுபிடியுங்கள்’ என்று பல துப்புகளை கதை முழுவதும் தூவி விட்டிருப்பார். அப்பாவிகளை சந்தேகப்பட வைத்து விட்டு, யாரும் எதிர்பார்க்காத ஒருவரை குற்றவாளியாக மாற்றுவதில் இவர் வல்லவர்.
இதன் தழுவலாக தமிழில் வெளி வந்த ‘நடு இரவில்’ படத்தில் கற்பனை செய்தே பார்க்க முடியாத வி.எஸ்.ராகவனை வில்லனாக சித்தரித்தபோது என்ன அதிர்ச்சி ஏற்பட்டதோ, அதே அதிர்ச்சி குண்டடிபட்டு இறந்ததாகக் காட்டப்படும் நீதிபதியை இறுதியில் குற்றவாளியாகக் காட்டும்போது ஏற்படுகிறது.
உலகிலேயே அதிகம் மொழியாக்கம் மற்றும் தழுவல் செய்யப்பட்ட கதை இதுதான். கதையின் மையக்கருத்தை வைத்துக் கொண்டு பின்புலத்தை மட்டும் மாற்றி ரீமேக்காகவும், ஃப்ரீமேக்காகவும் பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. நாவலின் சோக முடிவை, திரைக்கதை ஆசிரியர் டட்லி நிக்கோல்ஸ், மாற்றி ஹாலிவுட் ரசிகர்களுக்கேற்ப விறுவிறுப்பான கிளைமாக்ஸை அமைத்திருக்கிறார்.
நீதிபதியாக நடித்திருக்கும் பாரி ஃபிட்ஸ்ஜெரால்ட் தொடக்கத்தில் கண்டிப்பானவராகவும், இடையில் பயந்தவராகவும், இறுதியில் சைக்கோ கில்லராகவும் மிரட்டலாக நடித்திருக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான மருத்துவராக, பயத்தில் வியர்க்க விறுவிறுக்க வால்டர் ஹஸ்டன் படும் அவஸ்தையை நாம் உணர்கிறோம்.
வேலைக்காரன் தாமஸ் (ரிச்சர்ட் ஹேடன்) தன்மீது சந்தேகப்படுபவர்களின் அத்தனை சரக்கையும் புலம்பிக் கொண்டே குடிப்பது, ஓவர் போதையில் அனைவருக்கும் பரிமாறுவது பரிதாபத்தை வரவழைக்கிறது.
லோம்பார்ட்டாக வரும் லூயிஸ் ஹேவர்ட் மற்றும் வேரா கிளேதோர்னாக வரும் ஜூன் டூப்ரே, இருவரையும் காதலர்கள்போல் பழக வைத்து, திடீரென ஒருவரையொருவர் சந்தேகப்பட வைத்து, இறுதியில் அவர்கள் மட்டும் உயிரோடு வெளியேறுவதுவரை ரசிக்கும்படியான கெமிஸ்ட்ரி.
லூசியன் ஆண்ட்ரியட்- தன் ஒளிப்பதிவில், இருட்டிலிருந்து நீளும் கைகள், இடி மின்னல் வெளிச்சத்தில் தெரியும் முகங்கள் என விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார். மரியோ காஸ்டெல்னுவோ – டெடெஸ்கோ வின் பின்னணி இசை, அலற வைக்காமல், மர்மமான அமைதியைக் கடத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறது. ஒவ்வொரு கொலைக்கு முன்னால் ஒலிக்கும் விசில் சத்தமும், ‘டென் லிட்டில் இண்டியன்ஸ்’ தீம் மியூசிக்கும் ஒருவித பீதியை ஏற்படுத்துகின்றன.
ஹார்வி மாங்கர் தனது எடிட்டிங் மூலம் 97 நிமிட படத்தில் வரும் 8 கொலைகளையும், அவசரம் இல்லாமல் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு கொலை முடிந்த பிறகும் கேமரா, உடைந்த பொம்மையை நோக்கி நகரும் விஷூவல் ரிதம் பயத்தை ஏற்படுத்துகிறது.
ஃபேன்டசி மற்றும் நகைச்சுவை படங்களுக்குப் பெயர்போன பிரெஞ்சு இயக்குநர் ரெனே கிளேர், இப்படத்தை சாதாரணக் கொலைப் படமாக எடுக்காமல், ஒரு ‘பிளாக் காமெடி’ கலந்த த்ரில்லராக மாற்றி வெற்றிப்படமாக்கி இருக்கிறார்.
சட்டத்தால் தண்டிக்கப்படாத குற்றவாளிகளை ஒரு நீதிபதியே திட்டமிட்டு சிறுவர் பாடலை ஒலிக்க விட்டு, ஒரு புதிர் விளையாட்டுபோல தவிக்க வைத்து தண்டனை கொடுக்கும் இரட்டை மனோநிலை ரசிக்க வைக்கிறது. ஒரு மதியநேரத்தை ஒதுக்கிப் பார்த்தால் மர்மக் கதை விரும்பிகள் தவறவிடக்கூடாத பொக்கிஷமாகத் தெரியும் படம் இது.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)