ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். பிருத்விராஜ் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்.7-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, இப்போது அதிக பவுன்சர்களுடன் வெளியில் வருகிறார். சமீபத்தில் கோல்டன் குளோப் விருதுக்குச் சென்ற போதும் ஏராளமான பவுன்சர்களுடன் வந்தார். ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது பற்றி அவரிடம் கேட்டபோது, “யாராவது என்னை அணுகி புகைப்படம் எடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னிடம் பேச வருபவர்களை நேசிக்கிறேன் என்பதை பவுன்சர்கள் அறிவார்கள்.
ஆனால் என் அனுமதியின்றி புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்க்கவே அவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் செல்போன் வைத்திருப்பதால் அது போன்ற பிரச்சினையை அடிக்கடி எதிர்கொள்கிறேன்.
என் மகளுடன், பூங்காவில் இருக்கிறோம் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம் என்றால் அடுத்த சில நிமிடங்களிலேயே அதை திடீரென்று ஆன்லைனில் பார்ப்பேன். அதைத் தவிர்ப்பதற்காக, அந்த பாதுகாப்புக்காகவே பவுன்சர்களை நியமித்துள்ளேன். வேறு காரணமில்லை. யாரும் என்னைக் கொல்லப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.