இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை படமாக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூர், ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். மேலும் அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே என பலர் நடித்துள்ளனர்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் 2 பாகமாக உருவாகிறது. பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் நமித் மல்ஹோத்ராவும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் 2-வது பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கூறும்போது, “ராமாயணம் நமது கலாச்சாரம், நமது கதை, நமது வரலாற்றின் அடித்தளம். ஹாலிவுட்டில் கால் பதிக்க கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக முயற்சி செய்து வருகிறேன். அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், ஹாலிவுட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாங்கள் யார், எங்கு இருந்து வந்தோம், எவ்வளவு செழுமையான கலாச்சாரமும் வரலாறும் கொண்டவர்கள் என்பதை உலகம் இதுவரை காணாத வகையில் பெருமையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ‘ராமாயணம்’ படத்தை உருவாக்கியுள்ளோம். எதிலும் ஒப்பிடமுடியாத வகையில் இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்திய சினிமாவை உலக வரை படத்தில் இடம்பெறச் செய்யும் ஆற்றல் ராமாயணத்துக்கு உண்டு. ஹாலிவுட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.