காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் தீவிரவாத முகாம்களில் இந்தியா அதிரடியான தாக்குதலை நடத்தியது. இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி ராணுவ அதிகாரி கேஜேஎஸ் தில்லான், ‘ஆபரேஷன் சிந்தூர்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் இண்டியா’ஸ் டீப் ஸ்டிரைக்ஸ் இன்சைட் பாகிஸ்தான்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதை மையமாக வைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ சம்பவம் திரைப்படமாகிறது. பூஷன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இதை, ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்குகிறார்.
அவர் கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், நவீனப் போர்க்களத்தில் தனது வலிமையை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. சர்ச்சையை உருவாக்குவது என் நோக்கமல்ல, மாறாக அதை உண்மைகளுடனும், தெளிவுடனும், சினிமாவின் மாயாஜாலத்துடனும் சொல்வதே என் நோக்கம்” என்றார்.