நடிகை பூனம் தில்லான்
இந்தி திரையுலகின் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பூனம் தில்லான், ஜூனியர் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் நடிகர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் பெரிய நட்சத்திரங்களை நாம் அக்கறையுடன் கவனிக்கிறோம். ஆனால், ஜூனியர் நடிகர்களின் நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கையே சரியான நேரத்தில் கிடைக்கும் சம்பளத்தை நம்பித்தான் இருக்கிறது.
எனவே, ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே நடிக்கும் நடிகர்களுக்குத் தினசரி அடிப்படையில் சம்பளம் வழங்குங்கள். மாத ஒப்பந்தத்தில் பணியாற்றுபவர்களுக்கு, அந்த மாதம் முடிந்த அடுத்த நாளே வழங்குங்கள். 90 நாட்கள் கழித்துதான் சம்பளம் வழங்கப்படும் என்ற நடைமுறை நியாயமற்றது.
தயாரிப்பாளர்களின் அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் அல்லது வீட்டு உதவியாளர்களுக்கு 90 நாட்கள் கழித்து சம்பளம் வழங்குவீர்களா? அப்படியிருக்கும்போது, ஜூனியர் நடிகர்கள் மட்டும் ஏன் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.