நடிகை கீர்த்தி சனோன்
திரைத்துறையில் ஆணாதிக்க மனப்பான்மை இன்னும் ஆழமாக இருப்பதாக நடிகை கீர்த்தி சனோன் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகையான கீர்த்தி சனோன், தனுஷுடன் ‘தேரே இஷ்க்மே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் நடித்துள்ள ‘காக்டெயில் 2’ ஜூன் 19-ல் வெளியாக இருக்கிறது. அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் திரைப்படத் துறையில் தொடர்ந்து நிலவும் பாலினப் பாகுபாடுகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அவர் கூறும்போது, “சினிமாவில் ஒரு படத்தின் பட்ஜெட்டை குறைக்க வேண்டிய சூழல் வரும்போது, தயாரிப்பாளர்கள் முதலில் கைவைப்பது, கதாநாயகியின் ஊதியத்தில்தான். படத்தின் மொத்த பட்ஜெட்டில் பெரும் பகுதி கதாநாயகனுக்கு வழங்கப்பட்டாலும், ஊதியத்தைக் குறைக்குமாறு நடிகைகளிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்தப் பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. திரைத் துறையில் ஆணாதிக்கம் ஆழமாக வேரூன்றியுள்ளது. சமத்துவத்தை நோக்கி நகர்வதற்கு நாம் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை, என்னுடன் நடித்த ஆண் நடிகர், அவர் சீனியர் இல்லை என்றாலும் அவரை அழைத்துச் செல்ல சிறந்த கார் வழங்கப்பட்டது.
ஆனால், அவரை விட சீனியராக இருந்தாலும் எனக்கு அப்படி வழங்கப்படவில்லை. இது கார் பற்றிய விஷயம் இல்லை; சமமான மரியாதை வேண்டும் என்பதற்கான விஷயம்” என்றார்.
சில திரைப்படங்களைத் தயாரித்துள்ள அவர், “பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். பல முன்னணி ஆண் நடிகர்கள், பெண்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களில் துணை வேடங்களில் நடிக்கத் தயங்குகிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும்” என்று கூறியுள்ளார்.