ஜான்வி கபூர், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா என பலர் நடித்துள்ள இந்தி திரைப்படம், ‘ஹோம்பவுண்ட்’. நீரஜ் கேவான் இயக்கியுள்ள இப்படத்தைக் கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது.
செப்.26-ம் தேதி வெளியான இப்படம், பஷாரத் பீர் என்பவர் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றின் அடிப்படையில் உருவானதாகக் கூறப்பட்டது.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்ற இப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டது. சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவுக்கான குறும் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் தனது நாவலைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டது என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பூஜா சாங்கோய்வாலா என்பவர் தர்மா புரொடக் ஷன்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2021-ம் ஆண்டு, தான் எழுதிய இதே பெயரிலான நாவலை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். “எனது நாவலின் கதை, 2020-ம் ஆண்டு பெருந்தொற்றின்போது புலம்பெயர்ந்தவர்களைப் பற்றியதுதான்.
படத்தைப் பார்த்தபோது, எனது புத்தகத்தின் தலைப்பைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், படத்தின் இரண்டாம் பாகத்தில், எனது நாவலின் காட்சிகள், உரையாடல், கதை அமைப்பு உள்ளிட்ட பல சம்பவங்களை அப்படியே எடுத்திருப்பதை அறிந்தேன்” என்று தெரிவித்துள்ள அவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர இருப்பதாகவும் அதற்கு முன் தனது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.