புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தொடங்கியுள்ள உலக புத்தக காட்சியில் 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
உலக புத்தகக் காட்சியில் டெல்லியில் நேற்று தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்தக் புத்தகக் காட்சியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
இதில் ஸ்பெயின் கலாச்சாரத் துறை அமைச்சர் எர்னஸ்ட் உர்தாசன் டோம்நெக், இந்தியாவுக்கான கத்தார் தூதர் முகமது ஹாச் அல்-ஜபிர், கத்தார் கலாச்சாரத்துறை அமைச்சர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய ராணுவத்தின் வரலாறு என்ற கருப்பொருளில் இந்த புத்தகக் காட்சி டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் அனுமதி இலவசம்.
இந்த புத்தகக் காட்சியில் 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் ஞானத்தை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், போஸ்டர்களை டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி காட்சிக்கு வைத்துள்ளது.
இந்த அரங்கில் அர்ஜுன் டேங்க், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல், தேஜஸ் போர் விமானம் ஆகியவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கு இங்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
1947-ம் ஆண்டு முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை நாடு மேற்கொண்ட முக்கிய போர்கள் பற்றிய விளக்கங்கள் இங்கு அளிக்கப்படுகின்றன. வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டு விழா, சர்தார் வல்லபபாய் படேலின் வாழ்க்கை ஆகியவையும் இந்த புத்தக காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இங்கு 3000-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 600 இலக்கிய நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றன. இதில் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்கின்றனர்.