புதுடெல்லி: கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி விலை சுமார் 1 லட்சமாக இருந்தது. இப்போது ரூ.2.45 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று கூறியதாவது: இந்த ஆண்டு, வெள்ளி தனது உடன்பிறந்த உன்னத உலோகமான தங்கத்தின் நிழலில் இருந்து வெளியேறி உள்ளது. வெள்ளிக்கு இது ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
வெள்ளியின் விலை, டாலர் மதிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 125% உயர்வைக் கண்டுள்ளது. தங்கத்தின் விலையும் இந்த ஆண்டு கணிசமாக (63%) உயர்ந்த போதிலும், வெள்ளி விலை உயர்வுடன் ஒப்பிடும்போது பாதி அளவுதான்.
வெள்ளியின் சகாப்தம் இப்போதுதான் தொடங்குகிறது. இது தனித்துவமானது. ஏனெனில் உள்ளார்ந்த மதிப்பையும் அதேசமயம் தொழில் துறை தேவையையும் கொண்ட ஒரே உலோகம் இதுவே ஆகும்.
சூரிய ஆற்றல் மின்கலங்கள், மின்சாரபேட்டரி வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் என புதிய தொழில்நுட்பங்கள் எதுவாக இருந்தாலும், வெள்ளியை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகின்றன.
இந்தியாவின் ஒரே வெள்ளி உற்பத்தியாளர் என்ற முறையில் எங்கள் குழுமத்தைச் சேர்ந்த இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் இதை நாங்கள் நேரடியாகக் கண்டுள்ளோம். வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால் வெள்ளியின் அசாதாரண பிரகாசம் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.