வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறாமல் உலக நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு தன்னிச்சையாக உயர்த்தினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ட்ரம்பின் வரி விதிப்பு உத்தரவை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து, வர்த்தக சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ் அனைத்து நாடுகளின் மீதும் 10% வரி விதித்தார். கடந்த பிப்ரவரி 24 முதல் நடைமுறைக்கு வந்த இது, சட்டப்படி 150 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா உட்பட 16 நாடுகளின் கொள்கைகள் மற்றும் தொழில் துறை நடைமுறைகள் குறித்து, அமெரிக்க வர்த்தக சட்டத்தின் (1974) 301-வது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (யுஎஸ்டிஆர்) நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வெளிநாட்டு வர்த்தக நடைமுறைகளை விசாரிக்கவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இந்தப் பிரிவு அதிகாரம் வழங்குகிறது. இரும்பு, அலுமினியம், வாகனம், பேட்டரிகள், இயந்திரங்கள், குறைக்கடத்திகள், சூரிய ஆற்றல் தொகுதிகள் உள்ளிட்ட துறைகள் இந்த விசாரணையின் கீழ் வருகின்றன.