புதுடெல்லி: பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். ஜனவரி 30ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியதாவது: பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த கூட்டத் தொடரின் போது அவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி இ-சிகரெட் புகைத்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அவையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இ-சிகரெட் விவகாரம் தொடர்பாக சிறப்பு கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. அந்த கமிட்டி அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.