வணிகம்

வேப்பனப்பள்ளி பகுதியில் சீத்தாப்பழம் மகசூல் அதிகரிப்பு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: இந்த ஆண்டு பரு​வ​மழை உரிய நேரத்​தில் பெய்​த​தால், வேப்​பனப்​பள்ளி பகு​தி​யில் சீத்​தாப்​பழம் மகசூல் அதிகரித்துள்​ளது. இதனால் விவ​சா​யிகள், வியா​பாரி​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டத்​தின் மொத்த பரப்​பள​வான 5,143 சதுர கி.மீட்​டரில், 2,024 சதுர கி.மீட்​டர் வனப்​பகு​தி. இங்​குள்ள சிறிய காடு​கள், வனத்தை ஒட்​டி​யுள்ள மலைக்​குன்​றுகளில் சீத்​தாப் பழ மரங்​கள் அதி​கள​வில் உள்​ளன. இதுத​விர விவ​சா​யிகளும் சீத்தா சாகுபடி செய்து வரு​கின்​றனர். குறிப்​பாக, வேப்​பனப்​பள்​ளி, மேலுமலை, சின்​னாறு, கிருஷ்ணகிரி, பர்​கூர், ஜெகதே​வி, தொகரப்​பள்​ளி, அஞ்​சூர், குரு​வி​நாயனப்​பள்ளி உட்பட பல்​வேறு பகு​தி​களில் சீத்​தாப்​பழம் சாகுபடி செய்​யப்​படு​கிறது.

இதுகுறித்து வேப்​பனப்​பள்ளி பகுதி விவ​சா​யிகள் மற்​றும் வியா​பாரி​கள் கூறிய​தாவது: இந்த ஆண்​டில், பரு​வ​மழை உரிய நேரத்​தில் பெய்​த​தால் சீத்தாப் பழ மகசூல் அதி​கரித்​துள்​ளது. அத்​துடன் சந்​தை​யில் நல்ல விலை​யும் கிடைக்​கிறது. கடந்த ஆண்டு 20 கிலோ கொண்ட ஒரு கிரேடு சீத்​தாப்​பழம் ரூ.50 முதல் ரூ.100 வரை கொள்​முதல் செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது ஒரு கிரேடு ரூ.100 முதல் ரூ.150 வரை கொள்​முதல் செய்​யப்​படு​கிறது.

இந்த ஆண்டு விளைச்​சல் அதி​கரித்​துள்​ள​தால், சீத்​தாக் காய்களை வியா​பாரி​கள் தரம் பிரித்து ஆந்​தி​ரா, கர்​நாட​கா, பிஹார், கேரளா, மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்​தான் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்​றுமதி செய்​கின்​றனர். இதே​போல், சென்னை, மதுரை, கோவை உள்​ளிட்ட பெருநகரங்​களுக்​கும் விற்பனைக்காக அனுப்பி வைக்​கப்​படு​கிறது. போக்​கு​வரத்து செலவுடன், 20 கிலோ கொண்ட ஒரு கிரேடு சீத்​தாப்​பழம் ரூ.220 முதல் ரூ.300 வரை ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது. வரத்து அதிகரித்து உள்​ள​தால், தின​மும் 10 டன் முதல் 20 டன் வரை ஏற்றுமதி செய்​யப்​படு​கிறது.

மகசூல் அதி​கரித்த நிலை​யில், விலை​யும் கை கொடுத்​திருப்​பது மகிழ்ச்சி அளிப்​ப​தாக உள்​ளது. மேலும், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்​சாலை​யில் மேலுமலை முதல் சின்​னாறு வரை​யில் சாலை​யின் இரு​புற​மும் 100-க்​கும் மேற்​பட்ட பெண்​கள், இளைஞர்கள், முதி​ய​வர்​கள் சீத்​தாப்​பழம் விற்​பனை​யில் ஈடு​பட்டு வருகின்றனர். இவர்​கள் வனப்​பகு​தி, அதனை ஒட்​டி​யுள்ள பகு​தி​களில் விளைந்த சீத்​தாப்​பழங்​களை பறித்​தும், மண்​டிகளில் இருந்து வாங்கி வந்​தும் கூறு போட்டு விற்​பனை செய்​கின்​றனர்.

இவர்​களிடம் அவ்​வழியே கார், இருசக்கர வாக​னங்​களில் செல்பவர்​கள் சீத்​தாப்​பழங்​களை வாங்​கிச்செல்​கின்​றனர். இதன் மூலம் அவர்​களுக்​கும் வரு​வாய் கிடைக்​கிறது. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT