மும்பை: மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் வளங்கள் குறிவைத்து தாக்கப்படுவதால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய் விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று காலையில் 7 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 114 டாலரை நெருங்கியது. பின்னர் சற்று குறைந்து வர்த்தகமானது. கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு கடும் சரிவு: அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.93.25 அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 74,207-ல் நிலைபெற்றது; நிஃப்டி 776 புள்ளிகள் சரிவடைந்து 23,002-ல் நிலைகொண்டது. இதன் காரணமாக, நேற்று ஒரேநாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எச்டிஎப்சி தலைவர்.. இதற்கிடையில், நிர்வாக நடைமுறைகளில் அதிருப்தி தெரிவித்து எச்டிஎப்சி வங்கித் தலைவர் அதானு சக்ரவர்த்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த வங்கியின் பங்குகள் வர்த்தகத்தின்போது 9 சதவீதம் சரிந்து ரூ.772 என்ற ஓராண்டு காலக் குறைந்தபட்ச விலையைத் தொட்டது. இதுவும் சந்தையின் சரிவுக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.