ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

 
வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி: இந்த ஆண்டில் இது 4-வது முறை!

அனலி

மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் டிசம்பர் மாதத்துக்கான நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் டிச.3, 4 மற்றும் இன்று நடைபெற்றது. இறுதி நாளான இன்று இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.

ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது.

பின்னர் செப்டம்பர் மாதத்தில் மேலும் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைக்கப்பட்டது.

தற்போது டிசம்பரில், 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 4-வது முறையாக. மேலும், இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த விகிதமாகும். அது மட்டுமல்லாது 2025-ம் ஆண்டில் மொத்தமாக 125 அடிப்படைப் புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT