சிங்கப்பூர்: பாதுகாப்புத் துறைக்கு தேவையான ஏர்பஸ் சி295 போக்குவரத்து விமானத்தை, இந்தியாவில் தயாரிக்க டாடா நிறுவனத்துடன் ஏர்பஸ் ஒப்பந்தம் செய்தது.
விமானப்படை பயன்பாட்டுக்கு 40 விமானங்கள் உட்பட மொத்தம் 56 விமானங்கள், குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா-ஏர்பஸ் மையத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதுகுறித்து சிங்கப்பூரில் நடைபெறும் விமான கண்காட்சியில் ஏர்பஸ் நிறுவன தலைவர் வோட்டர் வேன் வெர்ஷ் கூறும்போது, “ஏர்பஸ் சி295 ரக விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படுவது மிகப் பெரிய நடவடிக்கை.
எதிர்காலத்தில் வதோதரா மையத்தில் இருந்து சி295 விமானங்கள் விநியோகிக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக ஏர்பஸ் நிறுவனம் இந்தியாவில் வலுவாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
பெங்களூரில் உள்ள ஏர்பஸ் மையம் மிகப் பெரிய வளாகத்துக்கு மாற்றப்படுகிறது. இந்தியாவில் உள்ள திறமைசாலிகளுடனான உறவு வளர்ந்து வருகிறது. டெல்லி உட்பட பல நகரங்களில் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.