மும்பை: இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த முயற்சி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், 2027-ல் முழுவீச்சில் பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்று தெரிகிறது. இந்த சோதனை முயற்சி முதலில் ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகளில் தொடங்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த நோட்டுகள்தான் மக்களிடையே அதிக அளவில் கைமாறி, எளிதில் அழுக்காகவும் சேதமடையவும் செய்கின்றன.
புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுவதால், இப்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடாது. காகித நோட்டுகளும், புதிய பிளாஸ்டிக் நோட்டுகளும் தங்குதடையின்றி இணையாகவே புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகள் படிப்படியாகவே புழக்கத்தில் இருந்து மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பிளாஸ்டிக் நோட்டுகளைத் தயாரிக்கத் தேவையான பிரத்யேக தாள்களை வழங்க, உலகளாவிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்தத் தாள்களை வழங்க விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாகும். சாதாரண காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும். இவை தண்ணீர், அழுக்கு அல்லது எண்ணெயால் எளிதில் பாழாகாது.
மேலும், இவற்றை நகல் எடுப்பது மிகக் கடினம் என்பதால், கள்ள நோட்டுப் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியும். ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த புதிய முயற்சி குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.