புதுடெல்லி: கடந்த 5 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 பைசாவும், சென்னையில் 82 பைசாவும் விலை அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் அமெரிக்கா - ஈரான் போருக்கு முன்பாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 டாலருக்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு பேரல் 100 முதல் 120 டாலர் வரை விற்பனையாகிறது. விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 விலை உயர்த்தப்பட்டது. இதன்மூலம் ரூ.250 கோடி இழப்பு சரி செய்யப்பட்டது. எனினும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் ரூ.750 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்தச் சூழலில் 5 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் 90 பைசா அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.104.49,டீசல் விலை 86 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.11-க்கு விற்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.77-ல் இருந்து ரூ.98.64 என உயர்ந்துள்ளது.
அங்கு டீசல் விலை ரூ.90.67-ல் இருந்து ரூ.91.58 என விலை உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.109.70 என விற்பனை ஆகிறது. டீசல் விலை 94 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 96.07 என விற்பனை ஆகிறது.
இதுதொடர்பாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் அங்கோலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, நீண்ட தொலைவு உள்ளிட்ட காரணங்களால் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதி, சுத்திகரிப்புக்கு 45%, மத்திய அரசு வரி 25%, மாநில அரசு வரி 20%, பெட்ரோல் நிலைய உரிமையாளர் கமிஷன் 10% என்ற அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசு சுங்க வரியை ரூ.10 குறைத்தது. அதன்பிறகும் எண்ணெய் நிறுவனங்களின் இழப்புகள் தொடர்ந்தன. வேறு வழியின்றி தற்போது சுமார் 90 பைசா விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.