அகமதாபாத்: டெய்ம்லர் இந்தியா நிறுவனம் பாரத்பென்ஸ் பிராண்டின் கீழ் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 2 புதிய பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் பாரத்பென்ஸ் டார்க் ஷிஃப்ட் 1926 மற்றும் பாரத்பென்ஸ் 917 ஆகிய 2 பேருந்துகளை அறிமுகம் செய்தது.
இதில் டார்க் ஷிஃப்ட் 1926 பேருந்து, உலகளவில் நிரூபிக்கப்பட்ட ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது நகரங்களுக்கு இடையேயான நீண்ட தூரப் பயணம் மற்றும் பணியாளர் போக்குவரத்துக்கு மிகவும் உகந்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் கடினமான சாலைகளில் ஓட்டுநர்கள் அடிக்கடி கிளட்ச் மற்றும் கியர் மாற்றுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது.
ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவான 260 குதிரைத் திறன் கொண்ட இதன் இன்ஜின், சாலையின் தன்மைக்கு ஏற்ப தானாகவே சரியான கியரைத் தேர்ந்தெடுத்து சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. அதேபோல், பள்ளி மற்றும் பணியாளர் போக்குவரத்துக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரத்பென்ஸ் 917 பேருந்து, குறைந்த இயக்கச் செலவு மற்றும் ஓட்டுநர்களின் மேம்பட்ட உற்பத்தித் திறனை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த புதிய பேருந்துகளில் நிகழ் நேர வெப்ப நிலையைக் கண்காணிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அதி நவீன பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப் பட்டுள்ளன. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் மூலம் பாரத்பென்ஸ் இந்திய வர்த்தக வாகன சந்தையில் தனது பங்கை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.