வருமான வரி தாக்கல் செய்வோர் அனைவருக்கும் ஒரே மாதிரியான காலக்கெடுவை வருமான வரித் துறை நிர்ணயிக்கல்லை. ஐடிஆர் படிவத்துக்கு ஏற்ப காலக்கெடு மாறியுள்ளது. அனைத்துப் பிரிவினருக்கும் ஜூலை 31-ம் தேதிதான் கடைசிநாள் என்று கருதவும் தேவையில்லை. ஐடிஆர்-1, ஐடிஆர்-2, ஐடிஆர்-3, ஐடிஆர்-4 என பிரிவுகளுக்கு ஏற்ப காலக்கெடுவும் பிரித்து மத்திய வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
அதேசமயம், வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடுவை தவறவிடும் வரி செலுத்துவோருக்கு கடும் அபராதமும், வரிக்கான வட்டியையும் தாக்கல் செய்ய வேண்டியதிருக்கும். இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்குரிய கடைசி நாளைத் தெரிந்து கொண்டால், வரித் தாக்கல் செய்வது எளிதாக இருக்கும்.
ஐடிஆர் யாரெல்லாம் தாக்கல் செய்யலாம்?
மாத வருமானம் ஈட்டும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், வர்த்தகம் செய்வோர் என அனைவரும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். இதில் வரி வதிப்புக்குள் வந்தால்தான் ஒருவர் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. மாத வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் மத்திய அரசுக்கு கணக்கைத் தெரிவித்து, தன்னால் தேசத்துக்கும் செய்யும் பங்களிப்பை தெரிவித்து, தன்னுடைய வருமானத்தின் வழியை வெளிப்படையாக அரசுக்கு தெரிவிப்பதாகும்.
வருமான வரி கணக்கு தாக்கலால் என்ன பயன்?
வரி செலுத்தும் பிரிவுக்குள் வருவோர்தான் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வருமான வரி விதிப்புக்குள் வராதவர்களும் ஆண்டுதோறும் வருமானம் குறித்த கணக்குத் தாக்கல் செய்யலாம். இதன் மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவை வங்கியில் பெற முயலும்போது, எளிதாக கிடைக்கும்.
வரி செலுத்துவோரிடம் இருந்து வருமானத்துக்கு அதிகமான வரியை அரசு பிடித்தம் செய்திருந்தால், அதை திரும்பப் பெறுவதற்கும், ஐடிஆர் தாக்கல் செய்து, தங்களின் வருமானத்தையும், சேமிப்பையும், செலவையும் அரசுக்கு தெரிவித்து கூடுதல் வரியைத் திரும்பப் பெறவும் வரித் தாக்கல் அவசியம்.
பங்குச்சந்தை, சுயதொழில், சொத்து வாங்குதல் போன்றவற்றில் நஷ்டமடைந்துவிட்டால், அதில் செலுத்திய வரியை பிற்காலத்தில் லாபம் எடுக்கும்போது, நேர் செய்யவும், ஐடிஆர் தாக்கல் உதவுகிறது.
வருமான வரிக் கணக்கை ஒருவர் ஆண்டுதோறும் முறையாகத் தாக்கல் செய்திருந்தால், வெளிநாடு செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்தால், எளிதாகக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது, வருமான வரிச் சட்டம் 80டி , ஊதியத்தில் செய்யும் டிடிஎஸ் கழிவுத் தொகை, மருத்துவச் செலவில் ரூ.25 ஆயிரம் வரை விலக்கும் கோரமுடியும்.
யார் ஐடிஆர் கண்டிப்பாகத் தாக்கல் செய்ய வேண்டும்?
வருமான வரிச் சட்டத்தின்படி, பிரிவு 139(1)ன் கீழ், வெளிநாட்டுக்கு ஒருவர் செல்லும் போது தனக்கோ அல்லது மற்றொருவருக்கோ ஒரே ஒரு பரிமாற்றத்தின் மூலம் ரூ.2 லட்சம் வங்கிப் பரிமாற்றம் செய்தவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு நிதியாண்டின் ஒரே பரிமாற்றத்தில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக மின்சாரக் கட்டணம் செலுத்தியவர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
மொத்தமாகவோ அல்லது ஒரே பரிமாற்றத்திலோ வங்கியில் வைத்துள்ள நடப்புக் கணக்கில் ஒருவர் ரூ. 1 கோடி அல்லது அதற்கு அதிகமாக பரிமாற்றம் செய்திருந்தால், அவரும் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
யாருக்கு எந்த ஐடிஆர்?
இந்த நிதியாண்டு முதல் வருமான வரிக் கணக்குத் தாக்கலில் பல்வேறு புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 4 வரை 4 பிரிவுகளில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
ஐடிஆர்-1, மற்றும் ஐடிஆர்-2
அந்த வகையில் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 படிவத்தை மாத ஊதியம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தணிக்கை செய்யத அவசியம் இல்லாதவர்கள், சொத்துகள் விற்பனை மூலம் கிடைக்கும் ஆதாயம், டெபாசிட் வட்டி, பங்குச்சந்தை மூலதன ஆதாயம் பெறுவோர் தாக்கல் செய்யலாம்.
ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4
ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 படிவத்தை கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்தத் தேவையில்லாத பிரிவினர், வர்த்தகர்கள், தொழில் செய்வோர், இந்து கூட்டுக் குடும்பத்தினர் தொழில் மற்றும் வர்த்தகம் மூலம் வருமானம் ஈட்டுவோர் இந்த படிவத்தை பயன்படுத்தி வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். இந்த படிவத்தில் வரித் தாக்கல் செய்வோர் கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இதில் ஐடிஆர்-3 படிவத்தை தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர், வாடகைச் சொத்தில் இருந்து வருமானம் ஈட்டுவோர், குறுகிய அல்லது நீண்ட முதலீட்டு ஆதாயம் பெறுவோர், பங்கு முதலீடு அல்லது வங்கி முதலீடு மூலம் வட்டி அல்லது ஈவுத் தொகை பெறுவோர், பங்குச்சந்தை, ஊகவணிகம் ஆகியவை மூலம் வருமானம் ஈட்டுவோர், பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் இருந்து வருமானம் ஈட்டுவோர் ஆகியோர் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத் தலைவர் (HUF) ஆகியோரைத் தவிர ஐடிஆர்-3 படிவத்தில் யாரும் வரித் தாக்கல் செய்யக்கூடாது.
தொழில், வர்த்தகம் அல்லது பார்ட்னர்ஷிப் நிறுவனம் மூலம் வருமானம் பெறாத தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத் தலைவர் ஐடிஆர்-3 படிவத்தைத் தாக்கல் செய்யத் தேவையில்லை. மற்றொரு வகையில் தெரிவித்தால் ஐடிஆர்-1, ஐடிஆர்-2, ஐடிஆர்-4 படிவத்தில் வரித்தாக்கல் செய்யத் தகுதியுடையவர்கள், ஐடிஆர்-3 படிவத்தை பயன்படுத்தத் தகுதியற்றவர்கள்.
ஐடிஆர் தாக்கல் கடைசித் தேதி என்ன?
ஒவ்வொரு விதமான ஐடிஆர் படிவம் தாக்கல் செய்பவர்களுக்கும் ஒவ்வொரு விதமான கடைசித் தேதியை வருமான வரித் துறை அறிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதிதான் கடைசிநாள் என கருதத் தேவையில்லை.
ஐடிஆர்-1, ஐடிஆர்-2 படிவம் தாக்கல் செய்யும் தனிநபர்கள், ஓய்வூதியதாரர்கள், தணிக்கைக் கணக்கிற்குள் வராத வரிசெலுத்துவோர் தங்களின் படிவத்தை தாக்கல் செய்ய ஜூலை 31-ம் கடைசித் தேதியாகும்.
ஐடிஆர்-3, ஐடிஆர்-4 படிவம் தாக்கல் செய்யும் தணிக்கை தேவைப்படாத வர்த்தகம், தொழில் செய்யும் தனிநபர்கள், பிரிவினர் ஆகஸ்ட் 31 படிவத்தைத் தாக்கல் செய்ய கடைசித் தேதியாகும்.
தணிக்கை முறைக்குள் வரக்கூடிய வருமான வரி செலுத்துவோர் தங்களின் ஐடிஆர் படிவத்தை தாக்கல் செய்ய ஜூலை 31, 2026 கடைசித் தேதியாகும்.
தொழில், வர்த்தகத்தில் சர்வதேச பரிமாற்றங்களில் விலை நிர்ணய அறிக்கை மூலம் செயல்படுவோர் தங்களின் படிவத்தை இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கடைசியாகும்.
காலதாமதமாக வருமான வரித் தாக்கல் செய்ய கடைசித் தேதி 2026, டிசம்பர் 31-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய 2027, மார்ச் 31-ம் தேதி கடைசிநாளாகும்.
வரிவிதிப்பில் வராவிட்டாலும் அபராதம்
வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு234எப் கீழ் காலக்கெடு முடிந்தபின் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்பவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் காலதாமதமாக ரிட்டன் தாக்கல் செய்தால் அதற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். வரி செலுத்தும் பிரிவில் இல்லாமல் இருந்தால்கூட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாமல் தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.
ஐடிஆர்-4 (சுகம்) படிவத்தில் வந்துள்ள மாற்றம் என்ன?
ஐடிஆர்-4 என்பது சுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐடிஆர்-4 என்பது, தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்துக்குள் வந்து ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குள் தொழில் மற்றும் வர்த்தகம் மூலம் வருமானம் ஈட்டுவோர் தாக்கல் செய்யும் படிவமாகும்.
அது மட்டுமல்லாமல் மாதம் ஊதியம், ஓய்வூதியம், இதர வருமானங்களான முதலீடு மூலம் கிடைக்கும் வட்டி, குடும்ப ஓய்வூதியம், பங்குச்சந்தையில் கிடைக்கும் ஈவுத்தொகை, விவசாயத்தின் மூலம் ரூ.5ஆயிரம் வரை வருமானம், முதலீட்டு ஆதயம் மூலம் ரூ.1.25 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர், சேமிப்பு கணக்குகளில் மூலம் கிடைக்கும், டெபாசிட்கள் மூலம் பெறும் வட்டி, வருமான வரி ரீபண்ட் மூலம் கிடைக்கும் வட்டி,வட்டி வருமானம் பெறுவோர் இந்த ஐடிஆர்-4 படிவத்தில் வருவர்.
இந்த புதிய படிவத்தில் இந்த ஆண்டு முதல் வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியிருந்தால் அதை தெரிவிக்க வேண்டும்.
வரி செலுத்துவோர் தங்களின் முதலீடுகள் குறித்து கண்டிப்பாக வருமான வரித் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
இரு வீடுகள் வைத்திருப்போர் அதை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஐடிஆர்-1 படிவத்திலும் தெரிவிக்க வேண்டும், இதிலும் தெரிவிக்க வேண்டும்.
வாடகைக்கு விடப்பட்டுள்ள சொத்துகள், காலியிடங்கள், கட்டிடங்கள் ஆகியவை குறித்தும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் தெரிவிக்க வேண்டும்.