சென்னை: வணிகச் சுற்றுலா தொடர்பாக ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் மூன்றாவது சர்வதேச மீட் குளோபல் மைஸ் காங்கிரஸ் (MGMC 2025) மாநாடு நடைபெற்றது. வணிகச் சுற்றுலாத் துறையில் உலகப் புகழ்பெற்ற சிறப்பு மையமாக மாஸ்கோ திகழ்வதை இந்த மாநாடு உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த மாநாட்டில், இந்தியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் மற்றும் குளோபல் சவுத் அமைப்புகளின் 37 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 2 மடங்கு ஆகும்.
மைஸ் இடங்களின் வெற்றி, வணிக நிகழ்வுகளின் செயல்திறன், நரம்பியல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் இத்துறையில் அனுபவப் பொருளாதாரம் போன்ற தலைப்புகளை இந்த பல்-வடிவமைப்புத் திட்டம் உள்ளடக்கி இருந்ததுடன், சாதனை அளவிலான வணிகச் சந்திப்புகளையும் ஏற்படுத்தியது.
அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் வணிகச் சுற்றுலாச் சந்தைகளில் ஒன்றாக இருந்ததால், இந்த மாநாட்டில் இந்தியா முக்கியப் பங்கு வகித்தது. இந்தியாவிலிருந்து 53 முக்கிய வணிக அமைப்புகள் இதில் பங்கேற்று, சர்வதேச ஒத்துழைப்புக்கான தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தின.
இதில் பங்கேற்றவர்களில் 70% பேர் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள் என்பதால், மாநாட்டிலேயே பல முக்கிய வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மாநாட்டின் ஒரு பகுதியாக சாதனை அளவாக 8,000-க்கும் மேற்பட்ட வணிகச் சந்திப்புகள் நடைபெற்றன.
விஸ்கிராஃப்ட் (Wizcraft) குழுமத்தின் நிறுவனர் சப்பாஸ் ஜோசப் இந்த மாநாட்டில் பேசும்போது, “மைஸ் என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதி. ‘ஒரே மக்கள், ஒரே உலகம்’ என்ற தத்துவத்தை இது வலுப்படுத்தும்” என்றார்.
மேலும், இந்திய மாநாட்டு மேம்பாட்டுப் பணியகத்தின் (ICPB) உறுப்பினர் துஷார் கேஷர்வானி உள்ளிட்ட பல சர்வதேச வல்லுநர்கள் இத்துறையில் நரம்பியல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலப் பயன்பாடு குறித்து விவாதித்தனர்.
பிரிக்ஸ் மற்றும் குளோபல் சவுத் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு பாலமாக இந்த மாநாடு அமைந்தது. மாஸ்கோ நகரம் தன்னை ஒரு சிறந்த வணிக மற்றும் கலாச்சார மையமாக உலகுக்கு மீண்டும் பறைசாற்றியுள்ளது.